துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெயரைப் பயன்படுத்தி, சமூக வலைதளமான, கட்செவி அஞ்சல் வாயிலாக மோசடி நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கவனமாக இருக்கும்படி மக்களுக்கு துணை ஜனாதிபதி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைய வழியாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. இதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பெயரைப் பயன்படுத்தி, சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் வாயிலாக நிதி திரட்ட முயற்சிகள் நடந்து வந்துள்ளது அம்பலமாகி உள்ளது.இந்நிலையில் இதுபோன்ற மோசடிகளில் இருந்து கவனமாக இருக்கும்படி, மக்களுக்கு துணை ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, யாரோ ஒரு நபர், வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக, வி.ஐ.பி.,க்கள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.அதில், நிதி உதவி கோரப்பட்டு உள்ளது.
யாரும் இதுபோன்ற குறுஞ்செய்திகளை நம்பி நிதியுதவி செய்யக்கூடாது. இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இந்த மோசடி குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





