காங்கிரஸின் 63 வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு: ராகுல் அதிர்ச்சி

Published:

புதுதில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. 70 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜய் மக்கான், கிரண் வாலியா, யோகானந்த் சாஸ்திரி, ஹாரூப் யூசுப் போன்ற முன்னணி தலைவர்களும் டெபாசிட் இழந்தனர். 2013–ல் தில்லி சட்ட மன்ற தேர்தலில் 24.55 சதவீத ஓட்டுகளை பெற்று 8 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸுக்கு தற்போது 14.85 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. காங்கிரஸின் ஓட்டுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றுவிட்டது. இந்த வரலாறு காணாத தோல்வியாலும், ஒட்டுகள் கணிசமாகக் குறைந்ததாலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இதுகுறித்து ஊடகங்களிலோ சமூக இணைய தளத்திலோ தனது கருத்துக்களை தெரிவிக்கவில்லை.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img