
பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை, அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தன.
நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்று கூறி வற்புறுத்தி அழைத்து வந்து பேச செய்த போது அதை கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் எவரும் நாடாளுமன்றத்தில் இல்லை. மோடியின் பேச்சின் வீச்சு தாங்க முடியாமல் எதிர்கட்சியினர் அனைவரும் வெளியே தலை தெரிக்க ஓடினார்கள். சுமார் இரண்டே கால் மணி நேரம் பிரதமர் மோடி தொடர்ந்து தனது உரையை ஆவேசமான பேச்சை எதிர்க்கட்சியினருக்கு பதிலாகநாடாளுமன்றத்தில் அளித்தார்.
மணிப்பூர் கலவரத்தை மையமாக வைத்து காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. குறிப்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
முன்னதாக, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை அடுத்து, கடந்த 8ஆம் தேதி, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பேசினர்.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன் தினம் நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசினார். அப்போது, மணிப்பூரில் பாரத மாதாவைக் கொன்று விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அவருக்கு பதிலளிக்கும் விதத்தில், அமேதி தொட்குதியில் ராகுலைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானி ஆவேசமாக பதிலளித்தார். அதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசினார்.
தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசினார். அப்போது திமுக., உள்ளிட்ட கட்சிகளை ஒரு பிடி பிடித்தார். அவரது பேச்சின் காரம் தாங்காமல் திமுக.,வினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 வது நாளாக நடந்த இந்த விவாதத்தின் போது, மாலை 5 மணியளவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
பிரதமர் மோடி பதிலுரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்“:
கடந்த 1999, 2003, 2018 ஆகிய ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்த சரத்பவார், சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்தான் முதலில் பேசினர். ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அமித்ஷா சொன்ன பிறகுதான் அவர் பேச முடிந்தது. அவர் ஏன் ஒதுக்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை, கொல்கத்தாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புதான் காரணமா?
நாட்டின் வளர்ச்சி சார்ந்த மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதை நடத்த அனுமதிப்பது இல்லை. அவர்களுக்கு தேசத்தை விட கட்சிதான் முக்கியம்.
கடந்த 2018-ம் ஆண்டு இதேபோல் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதுஎங்களுக்கு மங்களகரமாக அமைந்தது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதைவிட பெரிய வெற்றி பெற்றோம். அதுபோல், இப்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானமும் எங்களுக்கு மங்களகரமாக அமையும். அடுத்த ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில், முன்பை விட அமோக வெற்றி பெறுவோம். 3-வது முறையாக நாங்கள் ஆட்சி அமைப்போம். 2028-ஆம் ஆண்டில் நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது, பொருளாதாரத்தில் உலகின் 3-வது இடத்தை இந்தியா பெற்றிருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பாகிஸ்தான் சொல்வதை நம்பும். நமது ராணுவம் சொல்வதை நம்பாது. காஷ்மீரில் உள்ள சாமானியர்கள் மீது நம்பிக்கை வைக்காது. ஆனால், பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கொடி பிடிப்பவர்கள் மீது நம்பிக்கை வைக்கும். வெளிநாட்டு மண்ணில் இருந்து இந்தியாவை பற்றி எந்த எதிர்மறையான விஷயம் வந்தாலும், அதை காங்கிரஸ் பிடித்துக் கொள்கிறது. நாட்டில் புதிய நம்பிக்கை, ஆற்றல், உறுதிப்பாடு வந்த போதிலும், அதை காணாமல் நெருப்புக்கோழி மனநிலையில் காங்கிரஸ் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மேற்கு வங்காளத்தில் கடைசியாக 1972-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு, ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்று அம்மக்கள் கூறிவிட்டனர். உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடைசியாக 1985-ம் ஆண்டு வெற்றி பெற்றது. அதன்பிறகு அம்மாநில மக்கள், ‘காங்கிரஸ் வேண்டாம்’ என்று கூறிவிட்டனர். காங்கிரஸ் கட்சி ஆணவம் நிறைந்தது. தேசியக் கொடியில் இருந்து மூவர்ணத்தை எடுத்துக் கொண்டது. ‘காந்தி’ என்ற பெயரையும் திருடிக்கொண்டது.
காங்கிரஸ் கட்சி யாரையாவது எதிர்த்தால், அவர்கள் செழித்து வளர்வார்கள். அப்படி ஒரு ரகசிய வரம் வாங்கி வந்துள்ளது. அதற்கு நானே உதாரணம். என்னை 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வசை பாடி வருகிறது. ”மோடி, உங்களுக்கு கல்லறை தோண்டப்படுகிறது” என்பதுதான் அக்கட்சிக்கு பிடித்த கோஷம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், எல்.ஐ.சி., வங்கிகள் ஆகியவற்றை காங்கிரஸ் குறிவைத்தது. ஆனால், அவை மூன்றும் நல்ல வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளன. தற்போது, நாட்டுக்கு சாபமிடுகிறார்கள். அதனால், நாடு இன்னும் வலிமை அடையும். அதன்மூலம், மத்திய அரசும் மேலும் வலிமை அடையும்.
இந்தியா, உலக அளவில் புதிய உயரத்தை அடையும். இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா, மிக முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதன் தாக்கத்தை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு உணரலாம். அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தேவையான வலிமையான அடித்தளத்தை தங்கள் கடின உழைப்பால் மக்கள் அமைத்துள்ளனர்.
இந்திய பொருளாதாரம், தானாக வளரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு எந்த புரிதலும் இல்லை. ‘நிதிஆயோக்’ அறிக்கைப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர், வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு என் மீது மிகவும் பாசம். அது எந்த அளவுக்கு என்றால், நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தண்ணீர் குடித்தால் கூட அதை பிரச்னை ஆக்குவார்கள். 24 மணி நேரமும் மோடியை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டணியின் பெயரை மாற்றினால், ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ‘இந்தியா’ என்று புதிய பெயர் வைத்து விட்டனர். அதன்மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் இறுதிச்சடங்கு செய்து விட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது வடஇந்தியா என்று கூறுகிறார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி தானே.
ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். இதற்கு எதிர்க்கட்சியினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?.
தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறது. கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையேவுள்ள தீவு. சிலர் அதை மற்றொரு நாட்டுக்கு (இலங்கைக்கு) கொடுத்துவிட்டனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அது பாரதத்தாயின் ஒரு பகுதி இல்லையா?. 1962-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
மணிப்பூர் விவகாரத்தில் பாரத மாதா குறித்துப் பேசியவர், தமிழ்நாட்டில் விருதுநகரில் பாரத மாதாவுக்கு அரசே அவமரியாதை செய்ததை சொல்லவில்லை. விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டது, தமிழகத்தில் பாரத மாதாவுக்கு அவமரியாதை செய்கிறார்கள்” என்று பேசினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி 2 மணி 15 நிமிட நேரம் பேசினார். அவர் தனது உரையை முடிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் தனது உரையில் 90 நிமிடங்கள் வரை மணிப்பூர் குறித்து பேசாததை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர். பிரதமர் சபையில் பேசும்போதும் எதிர்க்கட்சியினர் மணிப்பூர், மணிப்பூர் என்று குரல் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பை குறிப்பிட்ட மோடி, ”கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் கேட்பதற்கு தைரியம் இல்லை. சுட்டு விட்டு தப்பி ஓடுகிறார்கள்” என்று கூறினார்.
பிரதமர் மோடியின் பதிலுரைக்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைவரும் எதிர்த்து குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால், ஆதரவு குரல் எழவில்லை. அதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.