spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா"சந்தா மாமா ரொம்ப தூரம் அல்ல; ஒரு 'டூர்' தூரம் தான்" : பிரதமர் மோடியின்...

“சந்தா மாமா ரொம்ப தூரம் அல்ல; ஒரு ‘டூர்’ தூரம் தான்” : பிரதமர் மோடியின் பெருமிதப் பேச்சு!

- Advertisement -
pm modi speech in chandrayaan success

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்.

தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

என் அன்பான குடும்ப உறுப்பினர்களே,

இப்படி ஒரு சரித்திரம் நம் கண் முன்னே படைக்கப்படுவதைக் காணும்போது, வாழ்க்கை பாக்கியமாகிறது. இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் ஒரு தேசத்தின் வாழ்வின் நித்திய நனவாகும். இந்த தருணம் மறக்க முடியாதது; இந்தத் தருணம் முன்னோடியில்லாதது; இந்தத் தருணம் வளர்ந்த இந்தியாவின் வெற்றி முழக்கம்; இந்தத் தருணம் புதிய இந்தியாவின் வெற்றி; இந்தத் தருணம் கஷ்டங்களின் கடலை கடப்பது; இந்தத் தருணம் வெற்றிப் பாதையில் நடப்பது; இந்த தருணம் 140 கோடி இதயத்துடிப்புகளின் திறனைக் கொண்டுள்ளது; இந்தத் தருணம் இந்தியாவில் புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை மற்றும் புதிய நனவைக் குறிக்கிறது; இந்தத் தருணம் இந்தியாவின் உயர்ந்து வருகின்ற விதியின் அழைப்பு;

‘அமிர்த கால’ விடியலில் வெற்றியின் முதல் ஒளி இந்த ஆண்டு பொழிந்துள்ளது. பூமியில் உறுதிமொழி எடுத்தோம், அதை நிலவில் நிறைவேற்றினோம். மேலும் நமது அறிவியல் சகாக்களும், “இந்தியா இப்போது நிலவில் உள்ளது” என்று கூறினார்கள். இன்று, விண்வெளியில் புதிய இந்தியாவின் புதிய பயணத்தை நாம் கண்டோம்.

நண்பர்களே,

நான் தற்போது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா வந்திருக்கிறேன். இருப்பினும், ஒவ்வொரு இந்தியக் குடிமகைனையும் போலவே, எனது இதயமும் சந்திரயான் மிஷனில் கவனம் செலுத்தியது. ஒரு புதிய வரலாறு வெளிவரும்போது, ஒவ்வொரு இந்தியனும் கொண்டாட்டத்தில் மூழ்கிவிட்டார்கள்; ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. என் இதயத்திலிருந்து, நான் எனது சக நாட்டு மக்களுடனும் எனது குடும்ப உறுப்பினர்களுடனும் ஆர்வத்துடன் இணைந்திருக்கிறேன். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக அயராது உழைத்த சந்திரயான் குழு, இஸ்ரோ மற்றும் நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த இந்த அற்புதமான தருணத்திற்காக 140 கோடி நாட்டு மக்களையும் வாழ்த்துகிறேன்!

என் குடும்ப உறுப்பினர்களே,

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும், திறமையாலும், உலகில் இதுவரை எந்த நாடும் எட்டாத நிலவின் தென் துருவத்தை இந்தியா அடைந்துள்ளது. இன்று முதல் சந்திரனுடன் தொடர்புடைய கட்டுக்கதைகள் மாறும்; கதைகள் மாறும்; புதிய தலைமுறைக்கான பழமொழிகள் கூட மாறும். இந்தியாவில், பூமியை நமது தாய் என்றும், சந்திரனை நமது ‘மாமா’ (தாய் மாமன்) என்றும் குறிப்பிடுகிறோம். “சந்தா மாமா வெகு தொலைவில் இருக்கிறார்” என்று சொல்லப்படுவது வழக்கம். “சந்தா மாமா ரொம்ப தூரம் அல்ல ஒரு ‘டூர்’ தூரம் தான்” என்று குழந்தைகள் சொல்லும் நாள் இப்போது வரும்.

நண்பர்களே,

இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், உலக மக்கள் அனைவருக்கும், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், பிராந்திய மக்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் வெற்றிகரமான நிலவுப் பயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல. இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியை உலகம் காணும் ஆண்டு இது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற எங்களின் அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மனித மைய அணுகுமுறை உலகளவில் வரவேற்கப்படுகிறது. நமது நிலவு பணியும் அதே மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும் இது எதிர்காலத்தில் மற்ற நாடுகளின் நிலவு பயணங்களுக்கு உதவும். குளோபல் சவுத் நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இத்தகைய சாதனைகளை அடையும் திறன் கொண்டவை என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் ஆசைப்படலாம்.

என் குடும்ப உறுப்பினர்களே,

சந்திரயான் மிஷனின் இந்தச் சாதனை, சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அப்பால் இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும். நமது சூரிய குடும்பத்தின் வரம்புகளை சோதித்து, மனிதகுலத்திற்கான பிரபஞ்சத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர, தொடர்ந்து பணியாற்றுவோம். எதிர்காலத்திற்காக பல பெரிய மற்றும் லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். விரைவில், சூரியனை ஆழமாக ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ திட்டத்தை இஸ்ரோ தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரோவின் நிகழ்ச்சி நிரலில் வீனஸ் இடம் பெற்றுள்ளது. ககன்யான் பணியின் மூலம், நாடு தனது முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கு விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது. வானம் எல்லையல்ல என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

நண்பர்களே,

அறிவியலும் தொழில்நுட்பமும் நமது தேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளம். எனவே, இந்த நாளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். இந்த நாள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நம் அனைவரையும் ஊக்குவிக்கும். இந்த நாள் நமது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பாதையை நமக்கு காட்டும். தோல்வியிலிருந்து பாடம் கற்பதன் மூலம் வெற்றி எவ்வாறு அடையப்படுகிறது என்பதை இந்த நாள் குறிக்கிறது. மீண்டும் ஒருமுறை, நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்கள்! மிக்க நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe