புது தில்லி: கடந்த 2012ம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ துணை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் ஆவணப் படத்துக்காக பேட்டி எடுக்கப் பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சம்பவ குற்றவாளி முகேஷ் சிங்கிடம் பிரிட்டிஷ் ஆவணப் படத் தயாரிப்பாளர் லெஸ்லீ உட்வின் பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அறிக்கை தருமாறு திகார் சிறைத் துறையிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம், இந்தப் பேட்டி விவகாரத்தில், சரியான நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளதா, குற்றவாளியிடம் பேட்டி காண்பதற்குத் தேவையான அனுமதியை முறையாகப் பெற்றிருந்தாரா என்பது குறித்தெல்லாம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனிடையே, அந்த ஆவணப் படத் தயாரிப்பாளர், தான் பதிவு செய்த பேட்டியினை சிறைத் துறை அதிகாரிகளிடம் போட்டுக் காட்டியதாகவும் அதன் பின்னரே வெளியில் அதனைத் தெரிவித்துள்ளார் என்றும் சிறைத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முறையான புகார் பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் திகார் சிறை நிர்வாகத்திடம் எதிர்பார்க்கிறதாம். வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த ஆவணப் படம் பிரிட்டனில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தொடர்புடைய செய்தி: [su_permalink id=”3651″ target=”blank”][/su_permalink]
‘நிர்பயா’ குற்றவாளியின் பேட்டி: திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது உள்துறை
Popular Categories


