வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறைந்த தொலைவு சென்று இலக்கினைத் தாக்கும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் என தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சுமார் 490 கிமீ. தொலைவு வரை உள்ள இலக்கைத் தாக்கும் வலிமை பெற்ற இரண்டு ஏவுகணைகளை நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நம்போ-வில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கில் உள்ள கடல்பகுதியை நோக்கி ஏவியது வடகொரியா. இந்த ஏவுகணை சோதனை குறித்து குறிப்பிட்ட தென் கொரிய ராணுவம், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கி உள்ளதை அடுத்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக தென்கொரிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே கூட்டுப்பயிற்சி நடத்தப்படுவதாக தென்கொரியா விளக்கம் கொடுத்துள்ள போதிலும், இதனை தங்கள் நாட்டிற்கு விடப்படும் அச்சுறுத்தலாக வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்க கூட்டுப் பயிற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது வடகொரியா. அதை ஒரு புகாராக முன்வைத்து, இது போன்ற ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதையும் வடகொரியா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனிடையே இங்குள்ள நிலைமையை நன்கு கண்காணித்து வருவதாகவும், தங்களை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கையை வடகொரியா தொடரும் என்றால் தகுந்த பதிலடி கொடுக்க தங்கள் நாட்டு ராணுவம் தயாராக உள்ளதாகவும் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

