ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
32ஆம் நாள் – இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
கொல்கொத்தா – 05.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (326/5, விராட் கோலி 101*, ஷ்ரேயாஸ் ஐயர் 77, ரோஹித் ஷர்மா 40, ரவீந்தர் ஜதேஜா 29*, ஷுப்மன் கில் 23, சூர்யகுமார் யாதவ் 22, இங்க்டி 1/63, ஜேன்சன் 1/94, ரபாடா 1/48,) தென் ஆப்பிரிக்கா அணியை (27.1 ஓவர்களில் 83, ஜதேஜா 5/33, குல்தீப் 2/7, ஷமி 2/18, சிராஜ் 1/11) 244 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். இரண்டாவதாக விளையாடும்போது தென் ஆப்பிரிக்க அணி தடுமாறுவது வழக்கம் என்பதால் இந்த முடிவு எடுத்திருக்க வேண்டும். ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடினார்.
24 பந்துகளில் 32 நிமிடம் ஆடி 2 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 40 ரன் எடுத்தார். அவர் 6ஆவது ஓவரில் ஆட்டமிழக்க கில் 23 ரன்னில் 11ஆவது ஓவரில் அவுட் ஆனார். 10 ஓவர்களில் 91 ரன் எடுத்திருந்தது.
அடுத்த 10 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோலி 38 பந்துகளில் 37 ரன்னும் ஷ்ரேயாஸ் 34 பந்துகளில் 11 ரன்னும் எடுத்திருந்தனர். 21 முதல் 30 ஓவர் வரை இந்திய அணி 123/2 என்ற ஸ்கோரில் இருந்து 179/2 என்ற ஸ்கோருக்கு முன்னேறினர்.
அதன் பின்னர் ரன்ரேட் குறையாமல் இந்திய பேட்டர்கள் பார்த்துக்கொண்டனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்திருந்தது.
விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று ஒருநாள் போட்டிகளில் தனது 49ஆவது சதத்தை அடித்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். டெண்டுல்கர் கோலியின் 49ஆவது சதத்திற்குப் பாராட்டு தெரிவித்தார். விரைவில் 50ஆவது சதத்தையும் அடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாட வந்த தென் ஆப்பிரிக்க அணி சொதப்பியது. க்விண்டன் டி காக் (5 ரன்) இரண்டாவது ஓவரிலும், பவுமா (11 ரன்) 9ஆவது ஓவரிலும், மர்க்ரம் (9 ரன்) 10ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். 10 ஓவர் பவர்ப்ளே முடிவில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 35 ரன் கள் எடுத்தது. இச்சமயத்தில் இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 91 ரன் கள் எடுத்தது நினைவிருக்கலாம்.
தொடர்ந்து கிளாசன் (1 ரன்), டுஸ்ஸன் (13 ரன்), மில்லர் (11 ரன்), கேசவ மகராஜ் (7 ரன்) என வரிசையாக பேட்டர்கள் ஆட்டமிழந்ததில் 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்க அணி 69 எடுத்திருந்த்தது. அடுத்த 7.1 ஓவர்களில் 14 ரன் கள் சேர்த்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து மொத்தம் 83 ரன் எடுத்து இந்திய அணியிடம் படுதோல்வியைப் பெற்றுக்கொண்டது.
விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி தான் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை வங்கதேசம், இலங்கை அணிகள் டெல்லியில் விளையாடுகின்றன.