புதிய பெருமை: பிரதமர் மோடி
பாரதத்திலேயே உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பறந்து சென்று ஆய்வு நடத்தினார்.
தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தது வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது என்று இந்த பறந்த பயண அனுபவம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை (எச்ஏஎல்) பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது புதிய அனுபவமாக இருந்ததாக அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல்., – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், நமது பாரத ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்திடம் எஸ்.யூ., 30 எம்.கே. ஐ.,ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று காலை பிரதமர் மோடி பெங்களூரு வந்தார். எச்ஏஎல் நிறுவனத்தின் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, திடீரென தேஜஸ் போர் விமானத்தில் பறக்கத் தயாராகி, அதில் பயணம் மேற்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதில் தேஜஸ் மூலம் புதிய பெருமை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தபோது, இரட்டை இன்ஜின் கொண்ட பயிற்சி தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். தேஜஸ் போர் விமானம் கடந்த அக்.4ஆம் தேதி இந்திய விமானப்படையில் , மத்திய அமைச்சர் அஜய் பட் மற்றும் விமானப்படை தளபதி சவுத்ரி முன்னிலையில் இணைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.