புது தில்லி வரும் ஜனவரி 25ம் தேதி 5வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது தேர்தல் ஆணையம். இதன் முக்கியக் கருத்தாக, ”எளிமையான பதிவு; எளிமையான திருத்தம்” என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பளுதூக்கும் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் தலைமை தாங்குகிறார். 25ம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட தினமும்கூட! 1950ம் ஆண்டில் ஜன.25ல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த தினத்தில், தேர்தல் ஆணையம் வாக்களிக்கத் தகுதியுள்ள இளைய வாக்காளர்களைச் சேர்த்து வாக்காளர்களை அதிகரிக்கச் செய்வது முக்கியக் கொள்கையாக செயல்படுத்தப் படவுள்ளது. மேலும், இந்த தினத்தை தேர்தல் நடவடிக்கைகளில் வாக்காளர்களை ஈடுபடுத்தச் செய்யும் விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவும் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

