சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ பொருளாதார பாட மறுதேர்வு ஏப்ரல் 25-ஆம் நடைபெறும் என்றும் 10ஆம் வகுப்பு மறுதேர்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தில்லியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் பேசிய போது வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி 12ம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
வினாத்தாள் வெளியானதால் 12ம் வகுப்பு பொருளியலுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கான கணிதத் தேர்வு தில்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியாகியுள்ளது. தேவைப்பட்டால் தில்லி மற்றும் ஹரியானாவில் மட்டும் மறுதேர்வு நடத்தப்படும். நாடு முழுவதும் தேர்வு நடத்துவதாக இருந்தால், 10ஆம் வகுப்புக்கு ஜூலை மாதத்தில் மறு தேர்வு நடைபெறும்.
வினாத்தாள் வெளியானது குறித்து தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணைகளின் அடிப்படையில், 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு குறித்து 15 நாட்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்று கூறினார் அனில் ஸ்வரூப்.
முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், மறுதேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததன் எதிரொலியாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மறுதேர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி ஜந்தர்மந்தரில் நேற்று போராட்டம் நடத்திய சிபிஎஸ்இ மாணவர்கள், இன்று, சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் முன்னர் போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டம் தீவிரமடைவதன் எதிரொலியாக, டெல்லி குஷாக் சாலையில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.