பெங்களூர்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த பாஜக., தனிப் பெரும்பான்மை பெற இயலாததால், முதல்வராகப் பதவி ஏற்று இரண்டரை நாட்களுக்குள் எடியூரப்பா பதவி விலகினார். இதை அடுத்து, காங்கிரஸ் கை கொடுக்க மஜத.,வின் தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
இதன் பின்னர், காங்கிரஸ், மஜத,., கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. முதல்வராக மஜத.,வின் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசின் பரமேஸ்வரும் மே 23ம் தேதி நேற்று முன்தினம் பதவியேற்றனர். தொடர்ந்து, குமாரசாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்ட போதும், தாம் ஒரு நாளில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகக் கூறியிருந்தார். இதை அடுத்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார். இந்தத் தீர்மானத்தை எடியூரப்பா தலைமையில் பாஜக.,வினர் புறக்கணித்து சபையை விட்டு வெளியேறினர்.
அதன் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கை கொடுக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் 117 பேர் அவருக்கு வாக்களித்தனர்.


