பெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக தண்டுக் கிளையின் ஆண்டு விழா நடைபெறுகிறது.
உலகத் தமிழ்க் கழகத்தின் தண்டு கிளையின் சார்பில் பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் காலை 10.30 மணிக்கு ஆண்டு விழா, தமிழ்ச் சான்றோர்களுக்குப் பாராட்டு விழா, தமிழார்வலர் கி.சி.தென்னவனின் முத்து விழா ஆகிய முப்பெரும் விழா நடக்கவிருக்கிறது.
சு.பரிதிமான் வரவேற்கிறார். அரிமா பத்மநாபன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறார். உலகத் தமிழ்க் கழகத் தலைவர் கதிர்முத்தையன் தலைமையில் நடக்கும் இவ் விழாவில் ஆ.நெடுஞ்சேரலாதன், க.அரசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத் தலைவர் கோ.தாமோதரன், மருத்துவர் பூங்காவனம், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் முத்துச்செல்வன், அன்பானந்தன், வெற்றிச்செல்வன், இளஞ்செழியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தமிழார்வலர் கி.சி.தென்னவனின் முத்து விழா சிறப்பு மலரை பெங்களூரு மேயர் இரா.சம்பத்ராஜ் வெளியிட, கர்நாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் பெற்றுக் கொள்கிறார். தமிழ்ச் சான்றோர்கள் கார்த்தியாயினி, துரைசாமி, சு.முத்துசாமி, கு.சுந்தரவதனன், சந்திரமோகன் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்படுகிறார்கள்.
காமராஜர் உயர்நிலைப் பள்ளித் தாளாளர் பொன்.கா.சுப்பிரமணியன், சிறந்த தமிழ் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிக்கிறார்.
நிறைவாக, வே.நடவரசன் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ந.அழகரசன், சு.பரிதிமான், பாவேந்தன், தனம் வேளாங்கண்ணி, தமிழ்க்குமரன், ம.மதலைமணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

