சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் மாறாத பற்று கொண்டவர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள். இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக டெஸோ இயக்கம் மதுரையிலே தொடங்கப்பட்டபோது அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அதிலே பங்கெடுத்துக் கொண்டார்.
பாரதப் பிரதமராக பதவி வகித்த நேரத்தில் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கைத் தமிழர்களின் துயர் தீர்க்க அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பெரும் முயற்சி எடுத்தார். இலங்கை மலையகத் தமிழகர்கள் உரிமையினை நிலைநாட்டிட நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களது குழந்தைகள் இந்தியாவில் படிக்க கல்வி உதவித் தொகை வழங்கினார்.
கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தை கடுமையாக எதிர்த்தவர்.மீனாட்சிபுரம் மதமாற்றம், நடைபெற்பொழுது தமிழகத்திற்கு நேரடியாக வந்து மதமாற்றத்தை தடுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். மண்டைக்காடு கலவரத்தின்போது இந்து தமிழர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி இருந்தது.
வாஜ்பாய் அவர்களை அழைத்து தமிழகத்திலே, திருப்பூரில் நடைபெற்ற கொங்கு மண்டல மாநாட்டில் பங்கேற்கச் செய்து, அந்த மாநாட்டின் பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் தமிழகத்தில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பான நிகழ்ச்சியை நான் நடத்தியதற்காக அந்த மாநாட்டிலே அவர் எனக்கு மாலை அணிவித்து கவுரவித்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
பாரதத்தாயின் திருவடிகளில் இன்றைக்கு நறுமனம் வீசம் மலராக மலர்ந்திருக்கிறார். அவர் ஆன்மா நற்கதி அடைய இந்து மக்கள் கட்சி இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றது அவருக்காக ஒரு மாத காலம் துக்கம் கடைபிடிக்கப்படும். கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்தி வைக்கப்படும். இந்து மக்கள் கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும். அவருடைய புகழ் அஞ்சலி நிகழ்ச்சிகளை கட்சி கிளைகள் தோறும் தமிழகம் முழுக்க இந்த மாதம் முழுக்க இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்திடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசத்திற்கு அரும்பாடுபட்ட மகாத்மா அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவை துக்கதினமாக அனுசரிக்க வியாபாரிகள், கடைகள், நிறுவனங்கள், ஒருநாள் விடுமுறை மற்றும் கடையடைப்பு செய்து துக்கத்தை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும், சமூதாய அமைப்புகளும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள் மற்றும் அவரது அனுதாபிகள் மற்றும் கார்யகர்தர்கள் கோயில்களுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி அன்னராது ஆத்மா இறைவனின் பாதகமலங்களை சென்ற சேர பிரார்த்திக்குமாறும், அமைதிப்பேரணி, மொளன அஞ்சலி மற்றும் புகழஞ்சலி கூட்டங்களும் நடத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்… – என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


