பெங்களூர்: ஆட்சி புரிவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே, அதன் மதிப்பும் கடமையும் அமைச்சருக்குப் புரியும்! கர்நாடக அமைச்சர்தான் இத்தகைய பேச்சுகளை இன்று எதிர்கொண்டிருக்கிறார். காரணம், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ம.ஜ.த.,கட்சிக்குக் கொடுத்தனர் மக்கள். காங்கிரஸையும் மொத்தமாக ஓரங்கட்டி ஒதுக்கினர்.
ஆனால் மக்களால் புறந்தள்ளப்பட்ட இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்து, மக்கள் விரோத அரசாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, அதே ஆட்சியின் அங்கமாக இருக்கும் அமைச்சர் ஒருவர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து, மக்கள் ஓட்டளித்து தேர்வானால்தானே மக்களின் சிரமம் புரியும் என்று கேள்வி கேட்டால்…?
அதற்கான எதிர்வினைகளை இப்போது கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் எதிர்கொண்டிருக்கிறார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சரைப் பார்த்து ஒரு மாநில அமைச்சர் செய்தியாளர்கள் கூட்டத்தை விரைவில் முடிக்கக் கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது. இப்பகுதிகளை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். மடிகேரி என்ற இடத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிர்மலா பதில் அளித்துக் கொண்டு இருந்தபோது மாநில அமைச்சர் ஷாரா மகேஷ், கூட்டத்தை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு நிர்மலா,’ இப்பகுதிக்கான பொறுப்பு அமைச்சர் கூறுவது போல் நான் செய்கிறேன். ஒரு மத்திய அமைச்சர், ஒரு மாநில அமைச்சர் சொல்படி கேட்க வேண்டி உள்ளது; நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் நான் என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு கூறுங்கள். அதன்படி நான் செய்கிறேன்’ என சத்தமாகக் கூறினார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் செய்தியாளர்களின் கேமராக்களில் அவரது பேச்சு பதிவாகிறது என்று சுட்டிக் காட்டினர். அதற்கு நிர்மலா,’ அவர்கள் எதை வேண்டும் என்றாலும் பதிவு செய்து கொள்ளட்டும்’ என வேதனையுடன் கூறினார்.
ஆனால் இந்தச் சம்பவம் குறித்துக் கூறிய மாநில அமைச்சர் மகேஷ், ”தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால், மக்கள் கஷ்டம் அவருக்கு தெரிந்து இருக்கும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை செய்ய வேண்டும். அதற்காக முதலில் அதிகாரிகளைப் பாருங்கள். அதன் பிறகு பாஜக.,வினர் மற்றும் ஆர்எஸ்எஸ்., தொண்டர்களை பாருங்கள் என்றுதான் அவரிடம் கூறினேன். மத்திய அமைச்சருடன் அதிகாரிகள் எவ்வளவு மணி நேரம் இருக்க முடியும். அவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளச் செல்ல வேண்டாமா’ என கேள்வி எழுப்பினார்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் நிர்மலா சீதாராமன். அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு மாநில அமைச்சர் இவ்வாறு கூறியது, தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இதனிடையே, நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கை ஒன்று வெளியானது. பத்திரிகை தகவல் அமைப்பு பிஐபி.,யில் இருந்து இந்த அறிக்கை வெளியானது. ஆனால் எவர் பெயரும் குறிப்பிடப் படாமல் இருந்தது அந்த அறிக்கை.
அதில், மாநில அமைச்சரின் கருத்து நாலாந்தரமானது என்றும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் கூறப்பட்டிருக்கும் கருத்து என்றும் சாடப் பட்டுள்ளது.
மேலும், முன்னதாகவே அமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி, பாதுகாப்பு அமைச்சர், முன்னாள் ராணுவத்தினருடன் அளவளாவும் நிகழ்ச்சியும் இருந்தது. அமைச்சர் அவர்களுடன் உரையாடிவிட்டு வருவதற்குள், அமைச்சர் அவசரப் படுத்தப் பட்டார். அதிகாரிகளுடனான கூட்டத்துக்கு மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த போது, அந்த இடத்துக்கு பத்திரிகையாளர்களை அழைத்து அமரவைத்திருந்தனர். அதனை ஏற்பாடு செய்தது யார்? முன்னறிவிப்பு கொடுக்காமல் இந்த ஏற்பாடு ஏன்?
பாதுகாப்பு அமைச்சர், தனது குடும்பத்தினர் என்று பொருள் படூம் வகையில்தான், முன்னாள் ராணுவத்தினருடன் பேசிவிட்டு வருவதை பரிவாரைச் சேர்ந்தவர்களுடன் பேசி விட்டு வருகிறேன் என்றார். ஆனால், அது தவறான பொருளில் ஊடகங்களாலும், அரசாலும் திசை திருப்பப் பட்டுள்ளது.
கடல் படை, தரைப்படை, விமானப் படை எல்லாவற்றையும் பரிவார் என்று தான் சொல்லுவது வழக்கம்! என்று விளக்கம் அளிக்கப் பட்டது.





