பாஜக., முன்னாள் அமைச்சரும் கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டி வீட்டில் கர்நாடக மாநில மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
கர்நாடகத்தில், அம்பிதந்த் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.600 கோடி அளவுக்கு சங்கிலித் தொடர் மார்க்கெடிங் முறையில் முதலீட்டை ஏமாற்றி விட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அமலாக்கத் துறை இந்த முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அம்பிதந்த் நிறுவனர் சையது அகமது பரீத், கர்நாடகத்தில் பாஜக., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி மூலம் ரூ. 20 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றாராம். இதற்காக ரூ. 2 கோடி பணம், 57கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ஜனார்த்தன ரெட்டியிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கூடுதல் ஆணையர் மஞ்சுநாத் சௌத்ரி தலைமையில் பல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.