புது தில்லி: மேகேதாட்டு அணை தொடர்பாக தம்பிதுரை மற்றும் கனிமொழிக்கு மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக, திமுக கட்சி தலைவர்களுக்கும், எம்பிக்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார். “மேக்கேதாட்டு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது”
அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்” என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் புதிதாக மேக்கேதாட்டுவில் அணையை ரூ.5,912 கோடி செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனிடைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் இந்த விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், தம்பிதுரை, கனிமொழி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இது, தமிழக விவசாயிகள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.