புது தில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10 சத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த 8ஆம் தேதி அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, வியாழன் அன்று மாநிலங்களவையிலும் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
சுமார் 9 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பின்னர் 165 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த சட்டத்திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.