ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறைச் செயலர், தொல்பொருள் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை தேஜோ மகாலயா என்ற சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி ஹரிசங்கர் ஜெயின் என்பவர் தலைமையில் 6 வழக்குரைஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில்… 1212-ம் ஆண்டு ராஜா பரமர்தி தேவ் என்பவர்தான் தேஜோ மஹாலயாவைக் கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான் சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப் பின் அதை ராஜா ஜெய் சிங் நிர்வகித்தார். 1632-ம் ஆண்டு ஷாஜகான் இதைக் கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. எனவே இதனை தேஜோ மஹாலயா என்று அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இது குறித்து வரும் மே 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறைச் செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
Popular Categories


