நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி-20’ போட்டியின் கடைசி ஓவரில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தொடரையும் இழந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் நடந்தது.
இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூஸி. அணி சிறப்பாக விளையாடி, 20 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. மிட்சல் (19), ராஸ் டெய்லர் (14) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் தவான் (5) ஏமாற்றினார். பின் கேப்டன் ரோகித், விஜய் ஷங்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. விஜய் ஷங்கர் 43 ரன் எடுத்தார். ரிஷாப் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்சல் பந்தில் கேப்டன் ரோகித் (38) ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களில் அவுட்டானார். தோனி (2) ஏமாற்றினார். இருப்பினும், தினேஷ் கார்த்திக், குர்னால் பாண்ட்யா வேகமாக ரன் சேர்த்தனர். சவுத்தீ வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது. முடிவில், இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கார்த்திக் (33), குர்னால் (26) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதை அடுத்து, டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது.