நாடே ‘ந்யாய்’ திட்டமான ரூ.72 ஆயிரம் விவகாரத்தில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப் பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, விவசாயிகளின் கடன்நெருக்கடிக்கு தீர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம், எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் நீட் தேர்வு முறைக்கு மாறாக மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு, விவசாயத்திற்கு தனிபட்ஜெட் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டுள்ளவருமான ராகுல், காங்கிரஸ் கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்வைக்கப் பட்டு, அது இயலாமல் போன கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஆக்சிடெண்டல் பிரதமர் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்தத் தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பே காங்கிரசின் முதன்மையான இலக்கு என கூறப்பட்டுள்ளது.
மேலும் சில வாக்குறுதிகள்…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
‘நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் .
தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை!.
அரசுப்பணிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் முழுமையாக ரத்து.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
பள்ளி கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.
அனைத்து மாநில விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்!