மோடியின் புதிய பிரசார உத்தி…! “நான் யார்..?” என்று கேட்க… “காவல்காரன்” என பதிலளிக்கும் கூட்டம்!

Published:

modi wardha1 - 2026பிரதமர் மோடி இப்போது புதிய உத்தியைக் கையாண்டு வருகிறார். தன்னை ஒரு காவல்காரன் – சௌகிதார் என்று மோடி சொல்ல, ராகுல் அதற்கு பதிலளிக்கும் விதமாக காவல்கார திருடன் என்று சொல்ல…  இந்த சௌகிதார் விவகாரம் சூடு பிடித்தது. இப்போது, காங்கிரஸ் அவருக்கு கழிப்பறைகளின் காவல்காரன் என்று பட்டப் பெயரைச் சூட்ட, இந்தப் பட்டத்தை தான் கீழ்த்தரமாகப் பார்க்கவில்லை என்றும், அது தனக்கு கௌரவத்தையே அளிப்பதாகவும் கூறினார் மோடி

இந்நிலையில், தனது பிரசாரக் களத்தில் புதிய உத்தியைக் கையாண்டு வருகிறார். பொதுமக்களைப் பார்த்து, தான் யார் என்று கேட்க, அவர்கள் சௌகிதார் என்று திருப்பி பதில் சொல்கின்றனர். இது பெருமளவிலான மக்களிடம் இயல்பாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

நேற்று மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் பேசிய மோடி,  பாஜக, அலையால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு தூக்கம் போய் விட்டதாகக் கூறினார்.

மேலும், இஸ்ரோ பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவிற்கும் எனது வாழ்த்துக்கள். 5 நாடுகளின் 24 க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

இதற்கு முன் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுவதை சிலர் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது நமது விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் சாமானிய மக்களும் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இன்று சாமானிய மக்கள் இந்த செயற்கைகோள்களைப் பார்த்துள்ளனர்.

காங்கிரஸ், தற்போது துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலாளிகளை அவமதித்து வருகிறது.  இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார், மோடி கழிவறைகளுக்குத் தான் காவலாளியாக இருந்துள்ளார் என்று.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளது. இந்த வெயிலிலும் இங்கு மக்கள் திரண்டுள்ளனர். அதிகரித்து வரும் பாஜக., அலையைக் கண்டு இன்று இரவு காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தூக்கமே போய் விடும்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அந்த இரு கட்சிகளும் ஆறு மாதம் தூக்கம் போடும் கும்பகர்ணனைப் போல் ஆட்சியில் இருந்த போது எல்லாம் தூங்கி விட்டு, இப்போது திடீரென எழுந்துகொண்டு… பணத்தின் மூலம் அனைத்தையும் மாற்றி விடலாம் என நினைக்கின்றன..

உங்களின் அவதூறுகள் தான் எனக்கு கௌரவம். என்னை கழிவறைகளின் காவலன் எனக் கூறி நீங்கள் அவமதிக்க நினைக்கலாம். இதன் மூலம் நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நான் காவலாளியாக உள்ளேன் என்பது எனக்குக் கிடைத்த பெருமையாக நான் நினைக்கிறேன்.

மகாராஷ்டிர விவசாயிகளை மறந்தவர் சரத்பவார். இது தேசியவாத காங்கிரஸுக்கு சோதனைக் காலம். எங்கே போட்டியிடுவது என்பது கூடத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். விதர்பாவில் வறட்சி வருவதற்கு அவர்கள் தான்…

modi wardha2 - 2026

இப்படி மோடி கேள்வி கேட்டு கூட்டத்தினர் பதில் சொல்லும் வகையிலான உத்தி, முன்னர் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் சிறப்பாகக் கையாளப் பட்டது. அவர் செய்வீர்களா செய்வீர்களா என்று கேள்வி கேட்டு… அதற்கு கூட்டத்தினரிடம் இருந்து வரும் பதில் ஓட்டுக்களாக மாறியிருக்கிறது! இந்த உத்தியை மோடியும் இப்போது கையாண்டு வருகிறார்.

அடுத்து, தில்லி தல்கதோரா மைதானத்தில் உரையாற்றிய போது, மீண்டும் சௌகிதார் கோஷம் விண்ணைப் பிளந்தது. ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்த அவர், போலியான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றார்.  “நானும் காவலாளி” தான் என்ற பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்கும் மக்களுடன்  இந்த உரையை நிகழ்த்தினார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் காணொளி மூலம் அவர் உரையாற்ற இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.  நிகழ்ச்சியியில் பேசிய பிரதமர் மோடி, தேசமும், குடிமக்களும்தான் எனக்கு முக்கியமே தவிர, தேர்தல்கள் இல்லை என்று கூறினார்.

பயங்கரவாதத்தின் மையப்புள்ளி எது என்று ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் தெரியும்! பாகிஸ்தானுக்கு எதிராக நான் விரைந்து நடவடிக்கை எடுப்பதை தேர்தல்கள் தடுக்க முடியாது! பாதுகாப்பு படைகள் தான் பாலகோட் தாக்குதலை நடத்தியன!. பாதுகாப்பு படைகள் மீதும், அவர்களது திறன்கள் மீதும் நான் முழு நம்பிக்கை வைத்திதுள்ளேன்

2014 ஆம் ஆண்டு என் மீது நம்பிக்கை வைத்து தேசத்துக்கு சேவை புரியும் வாய்ப்பை மக்கள் வழங்கினர். நான் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டின் செல்வத்தை பாதுகாப்பதற்கு என்னால் முடிந்த வரை சிறப்பாக முயன்றுள்ளேன்.

நான் எப்போதுமே பொதுமக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது இல்லை! மக்கள் அனைவரும் ஒற்றிணைந்தால், யாரும் நாட்டைக் கொள்ளையடிக்க முடியாது~

காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்கிறது. தில்லிக்கு தேர்தல் என்றால் சகிப்பின்மை இல்லை என்றும், பீகாரில் தேர்தல் என்றால், மோடி இடஒதுக்கீடு முறைக்கு எதிரானவர் என்றும் கூறி காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்கிறது!

சில கட்சிகளின் போலியான தேர்தல் வாக்குறுதிகளை நம்பாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!. ஒரு அரசு மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது, நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது! – என்று கூறினார் மோடி!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அதே போல் அருணாசலப் பிரதேசத்தில் பேசிய போது… பல வழக்குகளில் சிக்கி ஜாமினில் இருப்பவர்கள் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஊழலுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ரயில் போக்குவரத்து வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தை பாஜக. ஆட்சி தான் கொண்டு வந்திருக்கிறது. நாடு எப்போதெல்லாம் சாதனை படைக்கிறதோ அப்போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சி அடையும் போது, சிலர் இந்தியாவின் வெற்றிகளை கண்டு மனமுடைந்த நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.

நமது விஞ்ஞானிகள் உலகையே பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினாலும், சிலர் கிண்டல் செய்கின்றனர். பயங்கரவாதிகள் பேசும் மொழியையே எதிர்க் கட்சியினரும் பேசுகின்றனர். அதற்காக,  பாகிஸ்தானில் அவர்கள் கொண்டாடப்படுகின்றனர்.

மக்களின் நன்மைக்காக பாஜக அரசு செயல்படும் சூழலில், எதிர்க்கட்சியினர் தங்களது பைகளை நிரப்பவே விரும்புகின்றனர்.. என்றார் மோடி.

அசாம் மாநிலத்தில் உள்ள மொரன் நகரில் பேசியபோது,  பயங்கரவாதிகளின் சொந்த மண்ணிலேயே முதன்முறையாக இந்தியா தாக்குதல் நடத்தியது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பக்கம் இருக்கும் போது காங்கிரஸ் மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறது.  வலிமைமிக்க, உறுதிமிக்க அரசு வேண்டுமா அல்லது கறைபடிந்த, பொய்களுடன் வெற்று முழக்கமிடுபவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.. என்று பேசினார்.

தொடர்ந்து அசாமின் கோபூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது, நான் யார் என்று கேள்வி எழுப்பினார். அபபோது கூட்டத்தினர் சௌகிதார் என்று பலத்த குரல் எழுப்பினர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img