புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அந்த மசோதா பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி…இந்த மசோதா குறித்து மாநிலங்கள் அச்சப்படத் தேவையில்லை;இந்த மசோதா மத்திய அரசு, மாநிலங்கள் ஆகிய இரு தரப்புக்குமே இழப்பு ஏற்படுத்தாது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தி அளவை அதிகரிக்கும். எனவே இந்தியாவின் வருவாய் அதிகரிக்கும். எனவே பரிசீலனைக்கு இதை ஏற்க வேண்டும் என்றார். இந்த சட்டத் திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ், மற்றும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர் இந்த மசோதா பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்டதற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆட்சேபம் தெரிவித்தபோதிலும் வெளிநடப்பு செய்யவில்லை.

