ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக உருமாறி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் கரையைக் கடந்தது. முன்னதாக, புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான பானி புயல், அதி தீவிரப் புயலாக மாறி இன்று காலை 8 மணி அளவில் ஒடிசா கடற்கரையை நெருங்கியது. 8.30 மணி அளவில் பூரி கடற்கரையைத் தொட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அதன் மையப் பகுதி கரையைக் கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
புயல் கரையைக் கடந்த போது, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பாரதீப்பில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மீட்புக் குழுவினர் உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கஜபதி, கஞ்சம், கட்டாக், ஜகத்சிங்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்ய 5 ஆயிரம் சமையலறைகள் அமைக்கப்பட்டன.
பூரியில், 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது. புவனேஸ்வரம் விமான நிலையத்தில் இன்று நள்ளிரவு வரை விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
புயலால் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை சீர்செய்யும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிஸா கடற்பகுதியைக் கடந்த பானி புயல் தொடர்ந்து வடக்கு – வடகிழக்கே, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்துள்ளது. பிறகு வங்கதேசத்தில் கரையைக் கடந்த பின் அது வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதனிடையே, செயற்கைகோள் புகைப்படம் மூலம் ஃபானி புயல் நகர்வு துல்லியமாக கணிக்கப்பட்டு, கரையை கடக்கும் பகுதியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் இதன் நகர்வு துல்லியமாக கணிக்கப் பட்டு அறிவிக்கப் பட்டதாகக் கூறினார்.