பிரதமர் மோடிக்கு எதிராக பள்ளிச் சிறார்களை கோஷம் இட வைத்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா வதேராவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா ராபர்ட் வதேரா தேர்தல் பிரச்சாம் செய்து வந்தார். அப்போது, அங்கே கூடியிருந்த பள்ளிச் சிறுவர்கள் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கோஷம் எழுப்பினர். பிரதமர் மோடி ஒரு திருடன் என்று சௌக்கிதார் சோர் என்று கோஷம் எழுப்பினர்.
இந்த கோஷத்தை ராகுல் மேடைக்கு மேடை, ஊருக்கு ஊர், பேட்டிக்கு பேட்டி என சொல்லி வருகிறார். பிரதமர் மோடியை ஒரு திருடன் என்று சித்திரித்து அவர் பேசியது, ஒன்றுமறியாத சிறுவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப் பட்டு, அதனை பிரியங்கா முன்னிலையில் மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டது. அதனை பிரியங்கா ராபர்ட் வதேரா மிகவும் புன்னகையுடன் ரசித்துக் கேட்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.
இதை அடுத்து பதிலுக்கு ஒரு வீடியோவை பாஜக., வெளியிட்டது. அதில், பிரதமர் மோடி குழந்தைகளிடம் வந்தே மாதரம் சொல்வதும், ஜெய் ஹிந்த் சொல்வதும், பாரத் மாதா கீ ஜே என்று சொல்வதும், அதனை குழந்தைகள் திருப்பிச் சொல்வதுமாக இருந்தது.
இந்த இரு வீடியோக்களையும் முன்வைத்து, இதுதான் பிரதமர் மோடியின் குழந்தைகளுக்கான படிப்பினை. இதுவே காங்கிரஸாக இருந்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கு இதுதான் சாட்சி என்று கூறியிருந்தனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் பிரியங்கா ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரியங்காவுடன், குழந்தைகள் முழக்கமிட்டது குறித்தும் குழந்தைகளின் பெயர், எத்தனை குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர் உள்ளிட்ட விவரங்களை 3 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.