ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள், பாஜக., அலுவலகத்தில் குண்டு வீசித் தகர்த்தனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த வெறிச் செயலை நக்சலைட்டுகள் நிகழ்த்தியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு, வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் மாநில பாஜக தலைவருமான அர்ஜுன் முண்டா போட்டியிடும் குந்தி தொகுதிக்கு உட்பட்ட கர்சவன் என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை நக்சலைட்டுகள் நேற்று நள்ளிரவு குண்டு வீசி தகர்த்துள்ளனர்.
இந்தத் தொகுதியில் இன்று பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நக்சலைட்கள் மகாராஷடிராவில் உள்ள கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். அதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் நடந்து இரு தினங்களில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும், பிஜேபி எம்.எல்.ஏ., பீமா மாண்டவி கடந்த எப்ப்ர. 9ம் தேதி சட்டீஸ்கரில் தாண்டேவாடாவில் நக்சல்களால் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டார். அங்கே ஏப். 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதுபோல், இங்கும் நக்சல்கள் தேர்தல் நேரத்தில் ஒரு கொடூரத் தாக்குதலை பாஜக., அலுவலகம் மீது நிகழ்த்தியுள்ளனர்.