காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். அதனை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் அறிவித்துள்ளார்.
தில்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராஜினாமா செய்ய விரும்புவதாக ராகுல்காந்தி தகவலை வெளியிட்டார். ஆனால், ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை காங்கிரஸ் செயற்குழு ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டது என்று கூறப் படுகிறது.
இருப்பினும், ராகுல் ராஜினாமா கடிதம் எதையும் கொடுக்கவில்லை என்று காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தெளிவாக்கப் பட்டது. தான் ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார் என்றும், அதனை ஏற்க கமிட்டி மறுத்ததாகவும் செய்திகள் வெளியாயின.
17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ஒரு இடம் கூடப் பெற முடியாத மாநிலங்களில், அந்த அந்த மாநிலத் தலைவர்கள் தோல்விக்குப் பொறுப்பேற்று, தங்கள் மாநிலத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்து வந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலும் ராஜினாமா செய்வார் என்று கூறப் பட்டது.