நினைத்ததை சாதிக்கும் அசுரபலம் 2020இல் பாஜகவுக்கு கிடைக்கிறது. எதிர்க் கட்சிகளால் இனி மசோதாக்களை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
மாநிலங்களவையிலும் பாஜக அடுத்த ஆண்டில் அசுர பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும் மாநிலங்களவையில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 இதில் 12 பேர் ஆளும் கட்சியால் நியமிக்கப்படுவர். மசோதாவை நிறைவேற்ற 123 பேர் ஆதரவு தேவை. பாஜக கூட்டணிக்கு தற்போது 102 உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அறுபத்தைந்து உறுப்பினர்களும் உள்ளனர்.
முந்தைய 5 ஆண்டில் மொத்தக் குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் சில மக்களவையில் நிறைவேறினாலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தின. எனவே எதிர்க் கட்சிகளின் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக கூட்டணி விரைவிலேயே மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.
இந்த ஆண்டில் மாநிலங்களவையில் 10 இடங்கள் காலியாகின்றன. அடுத்த ஆண்டில் 72 இடங்கள் காலியாகின்றன. ஏப்ரலில் 55 ஜூனில் 5 ஜூலையில் ஒன்று நவம்பரில் 11 இடங்கள் காலியாகின்றன.
இதற்கிடையே மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இவற்றில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் 82ல் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்க முடியும்.
இதன் மூலம் 123 என்ற எண்ணிக்கையை கடந்து தனிப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெற்று விடும். அதன் பிறகு எந்த மசோதாவையும் மாநிலங்களவையிலும் கூட ஆளும் கட்சியால் எளிதில் நிறைவேற்ற முடியும்.
பாஜக கூட்டணியில் இல்லாத ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதால் இந்த முறை மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற பாஜக பெரிய அளவில் சிரமத்தை சந்தித்து என்று கருதப்படுகிறது!