தான் செல்லும் வழியில் இளைஞர்கள் சிலர் பதாகைகளை ஏந்தி வைத்த கோரிக்கையை தன் கான்வாயை நிறுத்தி கீழே இறங்கி வந்து பரிசீலனை செய்த முதல்வர் ஜெகனுக்கு இளைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
தான் வெற்றி பெறுவதற்காக ஆசி வழங்கி பூஜைகளைச் செய்த ஸ்வாமி ஸ்பரூபானந்தரைப் பார்த்து ஆசி பெற, செவ்வாய்க்கிழமை இன்று விசாகப்பட்டினம் சென்றார் முதல்வர் ஜெகன் மோகன். பின்னர் அவர் திரும்பி வரும் வழியில், மனிதாபிமான முறையில் நடந்து கொண்டார். அது இளைஞர்களின் பாராட்டைப் பெற்றது.
ஸ்வரூபானந்த சுவாமியின் ஆசிகளைப் பெறுவதற்காக விசாகப்பட்டினம் சென்ற முதல்வர் ஜகன் விசாகப் பட்டினத்தில் இருந்து திரும்பி வரும்போது, சாலையோரமாக சில இளைஞர்களும் பெண்களும் “ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் எங்கள் நண்பர் நீரஜை காப்பாற்றுங்கள்” என்ற பேனரைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த ஜெகன், உடனே தனது காரை நிறுத்தி கீழே இறங்கி, அவர்களிடம் சென்று என்ன விவரம் என்று கேட்டார். நீரஜ் என்ற அவர்களின் நண்பனுக்கு புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கில் செலவாகிறது; அரசு உதவி செய்தால் நண்பனைக் காப்பாற்றலாம் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
நண்பனுக்காக இளைஞர்கள் படும் சிரமத்தை பார்த்து மனம் இளகிய ஜெகன் உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மாவட்ட ஆட்சியர் ‘காட்டமனேனி பாஸ்கரு’க்கு ஆணையிட்டார். முதல்வர் உடனே உதவி செய்ததைப் பார்த்த இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஜூன் எட்டாம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா இருக்கும் நிலையில், ஜெகன் சாரதாபீடம் சென்றது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.