மாலத்தீவு நாட்டில் இரு நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை 11 மணியளவில் இலங்கை சென்றடைந்தார். இலங்கையில் மழைக்கு இடையே பிரதமர் நரேந்திர மோதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேனா.
கொழும்பு பண்டாரநாயகா விமான நிலையத்தில் மோதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கொச்சிகடை செண்ட் ஆண்டனி சர்ச்சுக்கு சென்றார் மோதி. அங்கு ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட இசுலாமிய பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அதிபர் மைத்ரீபால சிறீசேனவின் அலரி மாளிகைக்குச் சென்றார் மோதி. அங்கே சென்ற போது கனமழை கொட்டியது. அதற்கு நடுவே மோதியை சிறீசேன வரவேற்றார். அலரி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு, முப்படை அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் மோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் உரையாடினர். அலரி மாளிகையில் தமது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் மோதி நட்டார்.
இலங்கை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், இலங்கைக்கு பயணம் செய்யும் முதல் சர்வதேசத் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி!
இந்த பயணத்தின் போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக அதிபர் மைத்ரீபால சிறீசேன கூறினார். மேலும், இந்திய பிரதமரின் இந்த பயணத்தின் மூலம், இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா துறைகளின் வளர்ச்சியை சாதகமாக மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோதி, இக்கட்டான சூழ்நிலைகளில் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது தனது கடமை என்றார். தொடர்ந்து, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர்.
பின்னர், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவுடன் சற்று நேரம் பேசினார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப் படுகிறது. நட்பு ரீதியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபட்ச உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார் மோதி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலருடன் மோதி பேசியுள்ளார். அப்போது, தங்களுக்கு கால் மணி நேரமே இந்த சந்திப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நிறைய பேச வேண்டியுள்ளது! எனவே தில்லியில் பிறகு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலிப்பதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மோதி அவர்களுக்கு உறுதி அளித்தார்.
இதன் பின்னர், இலங்கையில் இருந்து 3 மணிக்குப் பதிலாக, ஒரு மணி நேரம் தாமதத்தில் 4 மணிக்கு இலங்கையிலிருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டார் மோதி.
Addressing a public meeting in Tirupati. Watch. https://t.co/6kHU35PFiH
— Narendra Modi (@narendramodi) June 9, 2019
இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோதி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோதியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோதி பேசியபோது,
திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி. மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
நாங்கள் 365 நாளும் மக்களுக்காக கடுமையாக உழைத்தோம். இதனால், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். பெரிய அளவில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதன் மூலம், அரசு மீதான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என சிலர் நினைக்கின்றனர். அவர்கள் மோதி என்ன செய்ய முடியும் என கருதுகின்றனர்.
நாங்கள் இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். ஒளி மயமான இந்தியாவிற்கான ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன், இந்தியாவிற்கு புதிய பாதையை காட்ட முடியும் என நம்புகிறேன்.
பொது மக்கள் அனைவரும் ஒரு அடி முன் எடுத்து வைத்தால், நாடு பல அடி முன்னெறும். 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்ற கடவுள் ஏழுமலையானிடம் ஆசி கேட்க உள்ளேன்.
மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். சிலர், இன்னும் தேர்தல் முடிவிலிருந்து வெளிவரவில்லை. ஆனால், எங்களை பொறுத்தவரை, தேர்தல் முடிந்துவிட்டது. தற்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆந்திரா வளர்ச்சியில் உச்சம் பெற வாய்ப்பு உள்ளது. ஜெகன் தலைமையில் ஆந்திரா இன்னும் முன்னேறும்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும். ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பாஜக.வினர் கடுமையாக உழைத்தனர். வெற்றிக்குப் பாடுபடுவர் என்று கூறினார்.
Feeling extremely blessed after praying at the Sri Vekateswara Swamy Temple in Tirumala, Andhra Pradesh. pic.twitter.com/rJc4IqUIw1
— Narendra Modi (@narendramodi) June 9, 2019
தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்ற பிரதமர் மோதி, அங்கு ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. வேத மந்திர கோஷம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.
Sharing some glimpses from Tirumala. pic.twitter.com/IfZ0NIADRB
— Narendra Modi (@narendramodi) June 9, 2019