December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்திய பிரதமர் மோடியின் மனதின் குரல்

சென்னை:

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய மனதின் குரல் உரையின் தமிழாக்கம்:  ஒலிபரப்பு நாள் : 22.05.2016

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மீண்டும் ஒரு முறை மனதின் குரல் என்ற நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. எனக்கு இந்த மனதின் குரல் ஏதோ ஒரு கடமை அல்ல; நான் உங்களோடு பேச மிகவும் உற்சாகமாக இருந்து வந்திருக்கிறேன், மனதின் குரல் வாயிலாக பாரதத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் உள்ள  நாட்டின் சாமான்ய மக்களோடு என்னால் இணைய முடிகிறது என்னும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இரவு 8 மணிக்கு மாநில மொழிகள் மூலமாக இதை வழங்கும் வெற்றிகரமான முயற்சி மேற்கொண்டுள்ள ஆகாசவாணியின் முயற்சிக்காகவும் நான் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். யாரெல்லாம் என் மனதின் குரலைக் கேட்கிறார்களோ, அவர்கள் பின்னர் கடிதம் வாயிலாக, தொலைபேசி வாயிலாக, mygov இணையதளம் வாயிலாக, நரேந்திர மோதி App வாயிலாக எல்லாம் தங்கள் உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் மன மகிழ்ச்சிக்கு காரணமாகிறது. உங்களின் பல கருத்துக்கள் அரசு நிர்வாகத்தில் எனக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் அரசு எத்தனை ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும், மக்கள்நலச் செயல்களுக்கு எத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் உங்களுடனான எனது இந்த உரையாடல், இந்த உறவு மிக உதவிகரமாக இருக்கிறது. நீங்கள் மேலும் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்றே நான் விழைகிறேன், அப்போது தான் மக்கள் பங்களிப்பு மூலமாக மக்களாட்சியை நாம் வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில் செயலாற்ற முடியும்.

வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சற்று தணியும் என்று நாம் எதிர்பார்த்தோம், ஆனால் இதற்கு மாறாக இது அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை அனுபவிக்கிறோம். இதற்கிடையில் பருவமழை ஒரு வாரகாலம் தாமதமாக வரலாம் என்ற செய்தியால் கவலை மேலும் அதிகரித்தது. கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பகுதி வெப்பத்தின் பயங்கரமான தகிப்பை அனுபவித்துக் கொண்டு வருகிறது. வெப்பமானியின் குறியீடு விண்ணை எட்டிக் கொண்டிருக்கிறது. விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என அனைவரும் வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். சூழல் காரணமாகத்தான் இந்தப் பிரச்சனை மேலும் கடுமையாகி இருக்கிறது. வனங்கள் குறைந்து கொண்டே வருகின்றன, மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன, ஒரு வகையில் மனித இனம் இயற்கையை அழிப்பதன் மூலமாக தன்னுடைய நாசத்துக்கே வழி கோலியிருக்கிறது. ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சுழல் நாள்.  உலகம் முழுவதிலும் சுற்றுச் சூழல் தொடர்பாக விவாதங்கள் நடைபெறுகின்றன, கவலை அதிகரித்து வருகிறது. இந்த முறை ஐக்கிய நாடுகள், உலக சுற்றுச்சூழல் நாள் தொடர்பாக zero tolerance for illegal wildlife trade, அதாவது சட்ட விரோதமான வன உயிரின வர்த்தகத்துக்கு பூஜ்யம் சகிப்புத்தன்மை என்ற கருத்தை முன்வைத்திருக்கிறது.

இது தொடர்பான விவாதங்கள் என்னவோ கண்டிப்பாக நடைபெறும். அதே வேளையில் நாம் மரம் செடி கொடிகள் பற்றியும், தண்ணீர் பற்றியும், எப்படி நமது வனங்களை அதிகரிக்க வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்க வேண்டும். ஏனென்றால் கடந்த நாட்களில் உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், இமயமலைச் சாரலில் என வனங்களில் கொடும் தீப்பற்றிக் கொண்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்; தீ ஏற்பட்டதன் மூல காரணம் உலர்ந்த இலைகளும், ஏதோ ஓரிடத்தில் சற்று கவனக்குறைவும் தான்; இதன் விளைவாக பெரிய அளவில் தீ பரவியது, ஆகையால் காடுகளைக் காத்தல், தண்ணீரை சேமித்தல் – இவை நமது பொறுப்பாக ஆகிறது. கடந்த நாட்களில் எந்த மாநிலங்கள் வறட்சியால் அதிக பாதிப்பை சந்தித்தனவோ, அப்படிப்பட்ட 11 மாநிலங்களின் முதலமைச்சர்களோடு விரிவான முறையில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

உத்திர பிரதேசம், ராஜஸ்தானம், குஜராத், மஹாராஷ்ட்ரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கட், ஜார்க்கண்ட், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஷா – வாடிக்கையாக நடப்பது போல நான் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களோடு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்க முடியும், ஆனால் அப்படி நான் செய்யவில்லை. நான் ஒவ்வொரு மாநில முதலமைச்சரையும் தனித்தனியாக சந்தித்தேன். ஒவ்வொரு மாநில பிரதிநிதியோடும் சுமார் 2, 2 ½ மணி நேரம் செலவு செய்து மாநிலங்களின் கருத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். பொதுவாக, இந்திய அரசு தரப்பில் எத்தனை பணம் அளிக்கப்பட்டது, என்ன செலவு ஆனது, இதைத் தாண்டி நுணுக்கமான கவனம் இருப்பதில்லை. பல மாநிலங்கள் நீர், சுற்றுச்சூழல், வறட்சி நிலையை எதிர்கொண்ட விஷயம், விலங்குகள், பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒரு வகையில் நாட்டின் எந்த ஒரு அரசியல் கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தாலும் சிறப்பாக முயற்சி செய்திருக்கின்றன என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கும் கூட ஆச்சரியத்தை அளித்தது. அதே சமயம் இந்தப் பிரச்சனையையும், நீண்ட காலமாக நிலவி வரும் இந்த நிலைமையையும் எதிர்கொள்ள நிரந்தரமான தீர்வுகளும், நீடித்த வழிமுறைகளும் என்னவாக இருக்க முடியும் என்பது பற்றிய ஆலோசனைகளும் நடைபெற்றன. ஒரு வகையில் இது எனக்கும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. எவை சிறந்த நடைமுறைகளாக இருக்கின்றனவோ, அவற்றை எப்படி அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துவது என்ற திசையிலும் செயலாற்ற வேண்டும் என்று நான் நீதிஆயோகிடம் தெரிவித்திருந்தேன். சில மாநிலங்களில், குறிப்பாக ஆந்திராவில், குஜராத்தில் தொழில்நுட்பத்தை நுணுக்கமான முறையில் பயன்படுத்தி இருந்தார்கள். இனிவருங்காலத்தில் மாநிலங்கள் அளவிலான வெற்றிகரமான முயற்சிகளை மற்ற மாநிலங்களுக்கும் நீதிஆயோக் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது போன்ற தீர்வுகளில் மக்கள் பங்களிப்பு என்பது ஒரு மிகப் பெரிய வெற்றிக்கான ஆதாரம். இதில் துல்லியமான திட்டமிடல், உகந்த தொழில்நுட்பம் ஆகியன இணைந்து, குறித்த காலத்துக்கு உள்ளாக அமைப்புக்களை நிறைவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால், சிறப்பான விளைவுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வறட்சி மேலாண்மை, தண்ணீர் பராமரிப்பு, ஆகியவற்றுக்கு ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பது மிக முக்கியம்; ஏனென்றால் தண்ணீர் என்பது பரமாத்மாவின் பிரஸாதம் என்று நான் கருதுகிறேன். நாம் கோயில்களுக்குச் செல்லும் போது, நமக்கு பிரஸாதம் அளிக்கப்படும் போது, அதில் சிறிதளவு கீழே சிந்தி விட்டாலும் நம் மனத்தில் வருத்தம் ஏற்படுவது போலத் தான் இதுவும்.

கீழே சிந்திய பிரஸாதத்தை கையில் எடுத்து, பரமாத்மாவிடம் மன்னிப்பு கோருகிறோம். அதே போல தண்ணீரும் இறைவனின் பிரஸாதம் தான். ஒரு சொட்டு நீர் வீணானாலும், நமக்கு துக்கம் ஏற்பட வேண்டும். ஆகையால் தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் பராமரிப்பு, தண்ணீர் பகிர்மானம், ஆகியனவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் தான் per drop-more crop, micro-irrigation, அதாவது குறைந்த அளவு நீர் மூலம், அதிக பயிர்கள், நுண்ணீர் பாசனம் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இப்போது பல மாநிலங்களில் நமது கரும்பு விவசாயிகள் கூட நுண்ணீர் பாசனத்தைப் பயன்படுத்துகிறார்கள், drip irrigation, சொட்டு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் sprinkler, தெளிப்பானைப் பயன்படுத்துகிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மாநிலங்களின் முதல்வர்களோடு உரையாடிய போது, சில மாநிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்பவர்கள் சொட்டுநீர்ப் பாசனத்தைக் கடை பிடித்ததால், எப்படி மகசூல் அதிகரித்ததோடு, தண்ணீர் சேமிக்கப்பட்டு, குறைவான உழைப்புக்கு உதவியது என்று தெரிந்து கொண்டேன். இந்த மாநிலங்களில் பலவற்றில், குஜராத்தில், மஹாராஷ்ட்ரத்தில், ஆந்திரத்தில் என இவர்கள் மிகப் பெரிய இலக்குகளை தங்கள் முன் வைத்திருந்தார்கள்.

 

இந்த மூன்று மாநிலங்களும் சொட்டு நீர்ப்பாசனத்தில் மிகப் பெரிய அளவு செயலாற்றி இருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சம், 3 இலட்சம் ஹெக்டேர்கள் நிலம் என, நுண்ணீர் பாசனத்திற்குள்ளாக கொண்டு வரப்பட வேண்டும் என்பது அவர்கள் முயற்சியாக இருக்கிறது. இந்த இயக்கம் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டால், விவசாயத்துக்கு அதிக நன்மை விளைவதோடு, நீர் சேமிப்பும் அதிகரிக்கும். நமது தெலங்கானா சகோதரர்களின் mission bhageerathi மூலமாக கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் நீரை மிகச் சிறப்பான வகையில் சேமிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆந்திரத்தில் நீரு பிரகதி மிஷன் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, groundwater recharging, அதாவது நிலத்தடி நீர் வளப்படுத்தல் முயற்சி. மஹாராஷ்ட்ரத்திலோ மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் மக்கள் வியர்வை சிந்தி வருகிறார்கள், பணத்தையும் அளிக்கிறார்கள். ஜலயுக்த் ஷிவிர் அபியான் – உண்மையிலேயே இந்த இயக்கம் மஹாராஷ்ட்ரத்தில் வருங்காலத்தில் சங்கடங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் மிகப் பெரிய முயற்சியாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். சத்தீஸ்கட்டில் லோக்சுராஜ் – ஜல்சுராஜ் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் பல்ராம் தாலாப் யோஜனா திட்டத்தின்படி, சுமார் 22000 குளங்கள். இவை சிறிய புள்ளிவிவரங்கள் இல்லை, இவற்றின் மீது வேலை நடைபெற்று வருகிறது. அவர்களின் கபிலதாரா கூப் யோஜனா.

உத்திர பிரதேசத்தின் முக்கியமந்திரி ஜல் பசாவோ அபியான். கர்நாடகத்தின் கல்யாணீ யோஜனா மூலமாக கிணறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் திசையில் வேலைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. ராஜஸ்தானம், குஜராத் மாநிலங்களில் மிகப் பழமையான காலம் தொட்டே குளங்கள் இருந்து வந்துள்ளன, அவற்றை நீர்க் கோயில்கள் என்ற வகையில் புத்துயிர் அளிக்கும் மிகப் பெரிய இயக்கம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானத்தில் முக்கியமந்திரி ஜல-ஸ்வாவலம்பன் அபியான் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜார்க்கண்ட் இயல்பாகவே வனப்பகுதி, ஆனால் இந்தப் பகுதியில் கூட தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. அவர்கள் தடுப்பு அணைகளுக்கான மிகப் பெரிய இயக்கத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் தண்ணீரைத் தடுத்துத் தேக்கும் திசையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சில மாநிலங்கள் நதிகளில் சின்னச்சின்ன குறுக்கணைகளைக் கட்டி 10-20 கி.மீ. வரை தண்ணீரைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாம் ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்க மாட்டோம் என்ற தீர்மானம் மேற்கொள்வோம் என்று நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

தண்ணீரை எந்த இடத்தில் சேமிக்கலாம், தண்ணீரை எந்த இடத்தில் தடுக்கலாம் என்று இப்போதிலிருந்து நாம் ஏற்பாடுகள் செய்வோம். இறைவன் நம் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு தண்ணீரைக் கொடுக்கிறான், இயற்கை நமது அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது, ஆனால் அதிக அளவு நீர் இருக்கிறதே என்று நாம் கவனக்குறைவாக இருந்து விட்டால், மழைக்காலங்கள் முடிந்த பின்னர், நாம் தண்ணீருக்காக பரிதவித்தால், இதற்கு யார் பொறுப்பு? இந்தத் தண்ணீர் விஷயம் ஏதோ விவசாயிகள் பற்றியது மட்டுமல்ல. இது கிராமங்கள், ஏழை, உழைப்பாளி, விவசாயிகள், நகர மக்கள், கிராம மக்கள், ஏழை-பணக்காரன் என அனைவரோடும் தொடர்புடைய விஷயம் என்பதால் கூறுகிறேன், மழைக்காலம் வருகிறது, தண்ணீர் மீது நமது முதன்மை கவனம் இருக்க வேண்டும், இந்த முறை நாம் எந்த அளவு நீரை சேமித்தோம், எத்தனை நீரைத் தடுத்தோம் என்ற கண்ணோட்டத்தில் நாம் தீபாவளியைக் கொண்டாடும் போது நினைத்துக் கொண்டு அதிக சந்தோஷமாகக் கொண்டாடுவோம். பார்த்துக் கொண்டே இருங்கள், நமது மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். நாம் என்ன தான் களைப்பாக இருந்தாலும், முகத்தில் கொஞ்சம் தண்ணீரை வாரி அடித்துக் கொண்டால், புத்துணர்ச்சி ஏற்படும், இல்லையா? இது தான் தண்ணீரில் இருக்கும் சக்தி.

 

நாம் என்ன தான் களைப்பை அனுபவித்தாலும், பரந்துபட்ட ஏரியையோ, கடல்நீரையோ பார்த்து விட்டால், எத்தனை பரந்த உணர்வு நமக்கு ஏற்படும் இல்லையா? என்ன ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை இறைவன் நமக்கு அளித்திருக்கிறான் பாருங்கள்!! மனப்பூர்வமாக இவற்றோடு இணையுங்கள், நீரை சேமியுங்கள், நீரைப் பராமரியுங்கள், நீர்ப் பகிர்மானத்தை நவீனமயமாக்குங்கள். இந்த விஷயத்தை உங்கள் அனைவரிடமும் நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மழைக்காலத்தை நாம் வீணடித்து விடக் கூடாது. இனிவரும் 4 மாதங்களில் ஒவ்வொரு சொட்டு நீரையும் தண்ணீர் சேமிப்பு இயக்கமாக நாம் மாற்றியமைக்க வேண்டும், இந்தப் பணி ஏதோ அரசுகளுக்கும், தலைவர்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல, இது மக்கள் சமுதாயத்தின் வேலையும் கூட. ஊடகங்கள் கடந்த நாட்களில் நீர்த்தட்டுப்பாடு விஷயத்தை மிகவும் விரிவான முறையில் எடுத்துரைத்தார்கள். ஊடகங்கள் நீரை சேமிக்கும் திசையில் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், இயக்கங்களை செயல்படுத்த வேண்டும், அந்த வகையில் நீர்த் தட்டுப்பாடு சங்கடத்திலிருந்து நாம் மீள ஊடகங்களும் தங்களாலான பங்களிப்பை நல்க வேண்டும் என்று நான் அவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

எனதருமை நாட்டு மக்களே, நாம் புதுமையான பாரதம் சமைக்க வேண்டும். நாம் ஒளிவுமறைவில்லாத பாரதம் சமைக்க வேண்டும். பல அமைப்புக்களை பாரதத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு சமமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால், நமது பழைய நடைமுறைகளையும் பழக்கங்களையும் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். நான் இன்று தொட்டுக் காட்டவிருக்கும் விஷயத்தின் மீது உங்கள் உதவி கிடைத்தால், நாம் அந்த திசையில் வெற்றிகரமாக நடை போட முடியும். ஒரு காலத்தில் நாணயங்களோ, காகிதப் பணமோ இல்லாத காலகட்டத்தில் barter system, அதாவது பண்டமாற்று முறை நிலவி வந்தது என்பதை நாம் பள்ளிக் கூடங்களில் படித்திருக்கிறோம். அதாவது உங்களுக்கு காய்கறிகள் தேவை என்றால், அதற்கு பதிலாக கோதுமை கொடுக்கலாம். உங்களுக்கு உப்பு தேவையென்றால், அதற்கு இணையாக காய்கறிகள் தரலாம். இவையெல்லாம் பண்டமாற்று முறை வாயிலாகவே நடைபெற்று வந்தது. மெல்ல மெல்ல பணம் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாணயம் வரத் தொடங்கியது, காகிதப் பணம் வரத் தொடங்கியது. ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. ஒட்டு மொத்த உலகமும் cashless society, நேரடிப் பணப்பரிவர்த்தனை இல்லாத சமூகம் என்ற நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.  மின்னணு தொழில்நுட்ப அமைப்பு வாயிலாக நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது, பணத்தை அனுப்பவும் இயல்கிறது.  பொருட்களை வாங்கவோ, தொகையை செலுத்தவோ முடிகிறது. இதன் காரணமாக ஜேப்படித் திருட்டு என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் போகிறது. கணக்கு வைத்துக் கொள்ள வேண்டிய கவலையே இல்லை, தானே கணக்கு வைத்துக் கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் ஒரு முறை பழகி விட்டால், இந்த அமைப்பு மிகவும் சுலபமாக இருக்கிறது. நாம் இப்போது பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தை அமல் செய்திருக்கும் வேளையில், நாட்டில் சுமார் அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்குகள் திறக்கப்ப்ட்டிருக்கின்றன எனும் போது வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆதார் அட்டை எண்ணும் கிடைத்திருக்கிறது, செல்பேசியோ கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களிடமும் சென்றடைந்திருக்கிறது. ஜன்தன், ஆதார், மொபைல் – JAM, J.A.M. இவற்றை ஒருங்கிணைக்கும் வகைகளில் cashless society, அதாவது நேரடிப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயம் என்ற திசையை நோக்கி நாம் செல்ல முடியும்.  ஜன் தன் கணக்கோடு கூட Ru-Pay அட்டை கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இனிவரும் நாட்களில் இந்த அட்டை credit and debit – கடன் மற்றும் பற்று என இருவழிகளிலும் உதவிகரமாக இருக்கப் போகிறது.

 

இன்றைய அளவில் மிகச் சிறிய ஒரு பயன்பாடு கூட வந்திருக்கிறது, இதை point of sale, P.O.S. – POS என்று அழைக்கிறார்கள். இதன் உதவியால் உங்கள் ஆதார் எண்ணாகட்டும், RuPay அட்டையாகட்டும், நீங்கள் யாருக்கும் ரொக்கமாகத் தர வேண்டியிருக்காது, இதன் மூலமாகவே கொடுத்து விடலாம். பையிலிருந்து பணத்தை எடுத்து அதை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. பணத்தைக் கையோடு கொண்டு செல்ல வேண்டிய தேவையே இல்லை. POS வழிமுறை மூலமாக தொகை செலுத்தப்படுதல், பெறப்படுதல் ஆகியவற்றில் இந்திய அரசு எடுத்துள்ள முனைப்புக்களில் இது ஒன்று. நாங்கள் தொடங்கியிருக்கும் இரண்டாவது வேலை Bank on Mobile – Universal Payment Interface Banking Transaction – UPI. இது வழிமுறைகளையே மாற்றி அமைக்கவிருக்கிறது. உங்கள் செல்பேசி வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாகி விடும், N.P.C.I.யும் வங்கியுமாக இணைந்து இந்த தளத்தை mobile app மூலமாக அமைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், இது மட்டும் சாத்தியமானால், நீங்கள் RuPay அட்டையைக் கூட கைவசம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம் இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு, Banking Correspondents அதாவது வங்கி முகவர்களாக செயல்படுவார்கள்.

 

உங்கள் வாயிற்படியில் வங்கிகள் என்ற திசையை நோக்கி அவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தபால் அலுவலகங்களும் வங்கிச் சேவைகளைப் புரிய முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இந்த வழிமுறைகளை நாம் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதோடு, பழக்கப்படுத்தியும் கொண்டு விட்டால், கற்றை கற்றையான நோட்டுக்களையோ சில்லறைப் பணத்தையோ நாம் கையாள வேண்டிய தேவையே இருக்காது, வேலைகள் அவை பாட்டுக்கு நடக்கும், இதன் காரணமாக ஒளிவு மறைவற்ற தன்மை மலரும். முறையற்ற, நாணயமில்லாத வேலைகள் முடிவுக்கு வரும். கருப்புப் பணத்தின் தாக்கமும் குறைந்து கொண்டே செல்லும்; ஆகையால் நான் நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்த வழிமுறையைத் தொடங்கித் தான் பார்ப்போமே!! ஒரு முறை நீங்கள் தொடங்கி விட்டால், நாம் மிக எளிதாக முன்னேறி விடுவோம், பார்த்துக் கொண்டே இருங்கள். இன்றிலிருந்து சுமார் 20 ஆண்டுகள் முன்பாக, நம் கைகளில் இத்தனை செல்பேசிகள் இருக்கும் என்று நம்மில் யாராவது கற்பனை செய்து கூட பார்த்திருப்போமா? மெல்ல மெல்ல இது பழக்கமாகி, இப்போது இது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒரு வேளை இந்த நேரடிப் பணப் பரிவர்த்தனை இல்லாத சமுதாயம் கூட, இந்த செல்பேசி வழியில் செல்ல நேரலாம், ஆனால் இது மிகவும் குறைவான நேரத்தில் அரங்கேறினால் மேலும் நல்லதாக இருக்கும்.

 

எனதருமை நாட்டு மக்களே, எப்போதெல்லாம் ஒலிம்பிக் பந்தயங்கள் வருகின்றனவோ, விளையாட்டுக்கள் தொடங்குகின்றனவோ, அப்போதெல்லாம் நாம் தங்கப் பதக்கத்தில் எத்தனை பின் தங்கி இருக்கிறோம், வெள்ளிப் பதக்கம் கிடைத்ததா இல்லையா, வெண்கலப் பதக்கமாவது கிடைக்குமா என்றெல்லாம் கைகளைப் பிசைகிறோம், தலையை உடைத்துக் கொள்கிறோம். நமக்கு முன்னால் விளையாட்டுத் துறையில் சவால்கள் அதிகம் இருப்பது என்னவோ உண்மை தான், ஆனால் நாட்டில் இதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். ரியோ ஒலிம்பிக்கிற்காகச் செல்லும் நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப் படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் தங்களாலான முனைப்புக்களை வெளிப்படுத்த வேண்டும். ஒருவர் பாடல் எழுதலாம், வேறு ஒருவர் கார்ட்டூன் வரையலாம், ஒருவர் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம், ஒருவர் விளையாட்டுக்கு ஊக்கமளிக்கலாம், ஆனால் ஒட்டு மொத்த தேசமும் நமது இந்த விளையாட்டு வீரர்களுக்கான ஒரு ஆக்கபூர்வமான சூழலை அமைத்துக் கொடுக்க வெண்டும், என்ன முடிவுகள் வர வேண்டுமோ, அவை வந்தே தீரும். இவை விளையாட்டுக்கள் தாம்; விளையாட்டுக்களில் வெற்றியும் கிடைக்கிறது, தோல்வியும் நேர்கிறது, பதக்கங்கள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம், ஆனால் நம்பிக்கை பலமானதாக இருக்க வேண்டும். நான் இதைப் பற்றிச் சொல்லும் போது நமது விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு சர்வானந்த் சோனோவால் அவர்கள் செய்த ஒரு செயல் என் மனதைத் தொடுவதாக அமைந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் நாம் அனைவரும் அஸாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தோம், இந்தத் தேர்தலில் திரு சர்வானந்த் அவர்கள் தலைமையில் போட்டியிட்டுக் கொண்டிருந்தோம், அவர் தான் எங்கள் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தார், ஆனால் அவர் அதே நேரத்தில் இந்திய அரசின் அமைச்சராகவும் இருந்தார். அஸாம் தேர்தல் முடிவுகள் வரும் முன்பாக அவர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பஞ்சாபின் படியாலா சென்றிருந்தார் என்பது அறிந்து எனக்கு மிக்க சந்தோஷமாக இருந்தது. ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கெடுக்கச் செல்லும் நமது விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி நேத்தாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகமான NISஇல் தான் நடைபெற்றுக் கொண்டிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கே சென்ற போது, விளையாட்டு வீரர்களுக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, ஒரு அமைச்சர் இந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்ற விஷயம் விளையாட்டு உலகத்துக்கே கூட ஆச்சரியத்தை உண்டாக்கியது. விளையாட்டு வீரர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், தேவைக்கேற்ப ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கிறதா இல்லையா, அவர்களின் உடலுக்கேற்ப தேவையான பயிற்றுனர் இருக்கிறாரா இல்லையா. பயிற்சி மேற்கொள்ளத் தேவையான அனைத்து இயந்திரங்களும் சீராக செயல்படுகின்றனவா இல்லையா என அனைத்து விஷயங்களையும் அவர் நுணுகி ஆராய்ந்தார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் அறைக்கும் சென்று பார்வையிட்டார். விளையாட்டு வீரர்களிடம் விரிவான முறையில் உரையாடினார், நிர்வாகத்தினரிடம் உரையாடினார், பயிற்றுனரிடம் உரையாடினார், விளையாட்டு வீரர்களுடன் அமர்ந்து அவர் உணவருந்தினார்.

தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்ற வேளையில், முதலமைச்சர் என்ற முறையில் புதிய பொறுப்புக்கள் ஏற்க வேண்டிய சந்தர்ப்பத்தில், எனது சகா ஒருவர், விளையாட்டுத் துறைகள் அமைச்சர் என்ற முறையில் இந்த விஷயத்தில் இத்தனை அக்கறை காட்டுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. நாமனைவரும் இந்த முறையில் விளையாட்டுக்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களை ஊக்கப்படுத்துவோம், நமது விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிப்போம். இதுவே ஒரு மிகப் பெரிய பலமாக உருவெடுக்கும், 125 கோடி மக்கள் நமக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதே கூட நமது விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

கடந்த முறை நான் FIFA 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கால்பந்தாட்டக் கோப்பை போட்டிகள் தொடர்பாக பேசியிருந்தேன், இது பற்றிய ஏராளமான ஆலோசனைகள் நாடு முழுவதிலிருமிருந்து எனக்கு வந்திருக்கின்றன; தவிர, நாடு முழுவதிலும் கால்பந்தாட்டம் பற்றிய ஒரு சூழல் ஏற்பட்டு வருவதை என்னால் காண முடிகிறது. பலர் தங்களாலான முனைப்புக்களில் ஈடுபட்டு தத்தமது அணிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். Narendra Modi Mobile Appஇல் எனக்கு ஆயிரக்கணக்கான ஆலோசனைகள் குவிந்திருக்கின்றன. பலர் விளையாடாதவர்களாக இருக்கலாம், ஆனால் நாட்டின் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டில் இத்தனை விருப்பம் இருக்கிறது என்ற தகவலே கூட மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது. க்ரிக்கெட், பாரதம் இரண்டுக்குமிடையே இருக்கும் காதலை நாம் நன்கறிவோம், ஆனால் கால்பந்தாட்டம் மீதும் கூட இப்படிப்பட்ட ஒரு காதல் இருப்பதை நான் கண்டு கொண்டேன்.

இது ஒளிமயமான ஒரு எதிர்காலத்தின் அறிகுறி. ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கவிருக்கும் நமது அனைத்து விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளுக்கும் நாம் உற்சாகம், ஊக்கம் நிறைந்த ஒரு சூழலை இனி வரும் நாட்களில் ஏற்படுத்திக் கொடுப்போம். ஒவ்வொரு விஷயத்தையும் வெற்றி தோல்வி என்ற கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டாம். Sportsman spirit நிறைந்த மனதோடு பாரதம் உலகில் தனது முத்திரையைப் பதிக்கட்டும். அந்த வகையில் நான் நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள், நமது விளையாட்டு உலகோடு இணைந்த அனைத்துத் தோழர்கள் மனதில் உற்சாகமும், ஊக்கமும் நிறையும் வகையில் சூழல் அமைத்துக் கொடுப்பதில் நாம் நமது பங்களிப்பை ஆற்றுவோம்.

கடந்த 8-10 நாட்களாக ஏதேதோ திசையிலிருந்து ஏதாவது ஒரு புதிய முடிவு வந்து கொண்டிருக்கிறது. நான் தேர்தல் முடிவுகள் பற்றிப் பேசவில்லை. ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்த பின் தேர்வுகள் எழுதியிருக்கும் 10வது, 12வது மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன, இந்த முடிவுகள் பற்றியே நான் பேசுகிறேன். நமது பெண் குழந்தைச் செல்வங்கள் சிறப்பான முடிவுகளை அடைந்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இது சந்தோஷம் அளிக்கும் விஷயம். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். யாரால் வெற்றி பெற முடியவில்லையோ, அவர்களுக்கு நான் மீண்டும் கூற விரும்புவது இது தான் – வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய செயல்கள் அதிகமாக இருக்கின்றது. நமது விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகள் அமையவில்லை என்றால், வாழ்க்கை அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கப் போவதில்லை என்பது தான்.

நம்பிக்கையோடு வாழுங்கள், நம்பிக்கையோடு முன்னேறுங்கள். ஆனால் ஒரு புதிய வகையான கேள்வி என் முன்பு எழுந்திருக்கிறது, இது பற்றி நான் இது வரை சிந்தித்ததே இல்லை. ஆனால் எனது mygov தளத்தில் ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது, இதில் என் கவனம் சென்றது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திரு கௌரவ், கௌரவ் படேல் – அவர் தனது ஒரு பெரிய இடர்பாட்டை என் முன்பு வைத்திருக்கிறார். மத்திய பிரதேச போர்ட் தேர்வுகளில் எனக்கு 89.33 சதவீதம் கிடைத்திருக்கிறது என்று எழுதியிருந்தததைப் பார்த்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவர் மேலும் எழுதி இருப்பதைப் படித்த போது, அது சோகமானதாக இருக்கிறது. ஐயா, 89.33 சதவீதம் மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறதே, வீட்டுக்குச் சென்றால் நாலாபுறத்திலும் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள், பாராட்டுவார்கள் என்றெல்லாம் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டு சென்றேன், ஆனால் வீட்டில் இருந்த அனைவரும் சொல்லி வைத்தாற் போல, இன்னும் 4 மதிப்பெண்கள் கிடைத்திருந்தால், உனக்கு 90 சதவீதமாக ஆகியிருக்குமே என்று கூறிய போது எனக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

அதாவது என் குடும்பத்தார், என் தோழர்கள், என் ஆசிரியர், யாருமே நான் வாங்கி இருந்த 89.33 சதவீதம் குறித்து மகிழவில்லை. பார்த்தாயா, 4 மதிப்பெண்களில் உன் 90 சதவீதத்தை கோட்டை விட்டு விட்டாயே என்றே கூறினார்கள். இது போன்ற ஒரு நிலைமையை நான் எப்படிக் கையாள்வது என்று எனக்குப் புரியவில்லை. வாழ்க்கையில் இது தான் எல்லாமுமா? நான் செய்தது எதற்கும் பயனில்லாத ஒன்றா? ஒரு வேளை உண்மையிலேயே என்னிடத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறதா? புரியவில்லை, என் மனது பெரிய பாரம் காரணமாக கனத்துக் கொண்டிருக்கிறது.

கௌரவ், உங்கள் கடிதத்தை நான் கவனமாகப் படித்தேன், இந்த உங்கள் வேதனை உங்களுடையது மட்டுமல்ல, உங்களைப் போன்ற இலட்சக்கணக்கான-கோடிக்கணக்கான மாணவர்களுக்கும் சொந்தமானது என்று நினைக்கிறேன், ஏனென்றால், நடந்தவற்றை எண்ணி சந்தோஷப்படாமல், அதில் துக்கத்தைத் தேடுவது என்பது எதிர்மறைத் தன்மையின் இன்னொரு வடிவம், அதனால் இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் துக்கத்தைத் தேடுவதால், நம்மால் சமுதாயத்தை சந்தோஷம் இருக்கும் திசையில் கொண்டு செல்ல முடியவே முடியாது.

உங்களது குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோர் உங்களுடைய 89.33 சதவீத மதிப்பெண்களைக் கண்டு உற்சாகப் படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், உங்கள் மனதிலும் ஏதாவது மேலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். உங்கள் குழந்தை தேர்விலே என்ன முடிவு அடைந்திருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், வரவேற்பு அளியுங்கள், உங்கள் மகிழ்வை வெளிப்படுத்துங்கள், உங்கள் பிள்ளையை மேலும் முன்னேறிச் செல்ல உற்சாகப் படுத்துங்கள், என்று நான் அனைத்துப் பெற்றோரிடமும், அக்கம்பக்கத்தாரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்கள் பிள்ளை 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வந்த பின்னும் கூட, 100 தான் வந்திருக்கிறதா, இன்னும் கூட நீ சிறப்பாக செய்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று கூற நேரலாம்; ஒவ்வொரு விஷயத்துக்கும் என ஒரு மதிப்பு இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

ஜோத்பூரிலிருந்து சந்தோஷ் கிரி கோஸ்வாமி அவர்கள் எழுதியிருக்கிறார், இவருமே கூட முந்தைய கடிதம் போலவே எழுதியிருக்கிறார். எனது சுற்றத்தார் எனது முடிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை, இன்னும் சிறப்பாக நீ செய்திருக்கலாம் என்கிறார்கள். எனக்கு கவிதை முழுவதுமாக நினைவிலில்லை, ஆனால் வெகு காலம் முன்பு யாரோ ஒரு கவிஞர் எழுதியதை நான் படித்திருந்தேன், வாழ்க்கை என்ற திரைச்சீலையில் வேதனை எனும் சித்திரத்தை வரைந்தேன். இதைப் பலர் பார்க்க அரங்கில் வைத்த போது, மக்கள் வந்தார்கள், ஒருவர் இதில் touch up செய்யத் தேவை இருக்கிறது என்றார், மற்றவர் நீலத்துக்கு பதிலாக மஞ்சள் அடித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்றார்; வேறு ஒருவர், இந்தக் கோடு இங்கிருப்பதற்கு பதிலாக அங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். எனது வேதனையின் சித்திரத்தைப் பார்த்து ஓன்றிரண்டு பேர்களாவது கண்ணீர் சிந்தியிருக்கக் கூடாதா. நெடுநாட்கள் முன்பு படித்த கவிதை என்பதால், கவிதையின் சொற்கள் அதே தானா என்று சரியாக நினைவில்லை, ஆனால் பாவம், உணர்வுகள் இதே தான். அந்தச் சித்திரம் வெளிப்படுத்தியிருந்த வேதனையை ஒருவருமே பார்க்கவில்லை, அனைவரும் touch up பற்றியே பேசிவிட்டுச் சென்றார்கள்.

சந்தோஷ் கிரி அவர்களே, உங்களுக்கும் கௌரவிற்கு இருப்பது போன்றே கவலை இருக்கிறது, உங்களைப் போன்று நாட்டில் கோடிக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்ய வேண்டிய பாரம் உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் உங்கள் நிதானத்தை இழக்காதீர்கள் என்று மட்டும் நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் தத்தமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துவார்கள், கேட்டுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் கருத்தில் நீங்கள் விடாப்பிடியாக இருங்கள், மேலும் சிறப்பாக செயலாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். ஆனால் முடிவு என்னவாக இருந்தாலும், அதில் மனம் மகிழ்ச்சி அடையாதிருந்தால், புதிய அமைப்பை உங்களால் மீண்டும் உருவாக்க முடியாமல் போகலாம். வெற்றிக்கான பலமான அஸ்திவாரம் தான் பெரும் வெற்றிகளுக்கான அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. வெற்றியிலிருந்து வேர் விடும் துக்கம், வெற்றியின் படிக்கட்டுக்களாக ஆக முடியாது, அது தோல்விக்கான உத்திரவாதத்தையே அளிக்க கூடியது.

ஆகையால் நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்ளும் விஷயம் என்னவென்றால், அந்த வெற்றியின் கீதத்தை உங்கள் உதடுகள் முணுமுணுக்கட்டும், அதிலிருந்து தான் புதிய வெற்றியின் வாய்ப்புக்கள் பிறப்பெடுக்கும். அதே சமயம் நான் அக்கம்பக்கத்தார், பெற்றோர், தோழர்கள் ஆகியோரிடம் அதிகம் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் பிள்ளைகள் தலையில் தயவு செய்து உங்கள் எதிர்பார்ப்புக்களை சுமத்தாதீர்கள். தோழர்களே, எப்போதாவது வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், வாழ்க்கையே அஸ்தமித்தா போய் விடும்? தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறாத ஒருவர், விளையாட்டுத் துறையில் நன்கு செயல்படலாம், இசைத்துறையில் வெற்றி பெறலாம், கைவினைத் திறத்தில் மேம்பாடு காணலாம், வியாபாரத்தில் வெற்றிகரமாக செயலாற்றலாம். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு ஆச்சரியமான திறனை அளித்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் சக்தியை அடையாளம் கண்டு கொள்ளுங்கள், அதில் உத்வேகத்தைக் கூட்டுங்கள், உங்கள் முன்னேற்றம் உறுதியாக அமையும். இது வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது. நீங்கள் சந்தூர் என்ற பெயர் கொண்ட இசைக்கருவியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு காலத்தில் சந்தூர் இசைக்கருவி கஷ்மீரத்தின் பள்ளத்தாக்குகளில் ஒலித்த நாட்டுப்புற இசையாக இருந்தது. ஆனால் ஒரு பண்டிட் ஷிவ் குமார் வந்தார், அவர் கை அதன் மீது பட்டது, இன்று அது உலகம் முழுவதிலும் ஒரு மகத்தான இசைக்கருவியாக மிளிர்ந்துள்ளது. ஷெஹனாயி – ஷெஹனாயி நமது இசை பரவியிருந்த அனைத்து பகுதிகளில் மட்டுமே ஒலித்த இசைக்கருவியாக இருந்தது. பெரும்பாலான ராஜா மஹாராஜாக்களின் அரசவைகளில், வாயிலில் தான் அதற்கான இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. ஆனால் உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் கரம் அதன் மீது பட்ட பின்னர், இன்று உலகின் மிக சிறப்பான இசைக்கருவிகளில் ஒன்றாக இது மலர்ந்திருக்கிறது. அதற்கென ஒரு அடையாளம் ஏற்படிருக்கிறது. அதே போன்று உங்களிடம் என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது பற்றிய கவலையை விட்டொழியுங்கள், உங்கள் சக்தியின் மீது கவனம் செலுத்துங்கள், அதை ஒன்று திரட்டுங்கள். நல்ல முடிவு கிடைத்தே தீரும்.

எனதருமை நாட்டு மக்களே, சில வேளைகளில், நமது ஏழைக் குடும்பங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் செலவினங்கள், வாழ்க்கை எனும் ஓட்டத்தை சற்று தடம் புரள வைத்து விடுகின்றன என்பதை நான் பார்க்கிறேன். நோய்வாய்ப் படாமல் இருக்க செலவு குறைவாக ஆகிறது, ஆனால் நோய்வாய்ப்பட்ட பின்னர் மீண்டும் உடல் நலம் பெறச் செலவுகள் அதிகம் ஆகின்றன என்பது உண்மை தான். நமக்கு நோயே வராத ஒரு வாழ்க்கையை நாம் ஏன் வாழக் கூடாது, இதனால் குடும்பத்தின் மீதும் செலவுச் சுமைகள் இல்லாது போகுமல்லவா? தூய்மை என்பது நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது. ஏழைக்கு மிகப் பெரிய சேவை செய்யக் கூடிய ஒன்று இருக்குமானால், அதை தூய்மை தான் செய்ய முடியும். நான் இடைவிடாது வேண்டும் இரண்டாவது விஷயம், யோகாஸனம். சிலர் இதை யோகா என்று அழைக்கிறார்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம். ஒட்டு மொத்த உலகிலும் யோகாவிற்கென்று ஒரு ஈர்ப்பு இருக்கிறது, முனைப்பு இருக்கிறது, அனைவரும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இது நமது முன்னோர்கள் நமக்கு அளித்திருக்கும் விலை மதிப்பில்லாத பொக்கிஷம், பரிசு, இதை நாம் உலகத்தாருக்கும் மனமுவந்து அளித்திருக்கிறோம். அழுத்தமும் நெருக்கடியும் நிறைந்த உலகிற்கு நிதானம் நிறைந்த வாழ்க்கை வாழத் தேவையான பலத்தை யோகம் அளிக்கிறது. Prevention is better than cure, அதாவது வருமுன் காத்தல் என்பார்கள். யோகம் பயில்பவர்கள் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கிறது, சமநிலையோடு இருக்கிறது, மனவுறுதியோடு இருக்கிறது, குறைவற்ற ஆன்மசக்தியோடு நிறைவாக இருக்கிறது, மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது – இவையெல்லாம் யோகம் தரும் வெகுமதிகள். ஜூன் மாதம் 21ஆம் தேதி யோக தினம், இது வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல, இது மேலும் பரவ வேண்டும், ஒவ்வொருவருடைய வாழ்விலும் இதற்கென ஒரு தனியிடம் வேண்டும், ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்க்கையில் 20 நிமிடங்கள், 25 நிமிடங்கள், 30 நிமிடங்கள் என யோகாஸனத்துக்காக செலவு செய்யுங்கள்.

இதைச் செய்ய ஜூன் மாதம் 21ஆம் நாள் நமக்கு கருத்தூக்கம் அளிக்கிறது. சில சமயங்களில் சமூகச் சூழல், தனி நபருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காரணியாக அமைகிறது. ஜூன் மாதம் 21ஆம் நாள் நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, முஸ்தீபுகளை இப்போதே துவக்குங்கள். உங்கள் முனைப்புக்களை நடைமுறையாக்க இன்னும் ஒரு மாதம் பாக்கி இருக்கிறது. நீங்கள் பாரத அரசின் இணையதளத்திற்குச் சென்றால், இந்த முறை யோகம் தொடர்பாக இருக்கும் பாடத் திட்டத்தில், எந்த எந்த யோகாஸனம் செய்ய வேண்டும், எப்படி அவற்றைச் செய்ய வேண்டும் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் இருக்கின்றது. அதைப் பாருங்கள், உங்கள் கிராமத்தில் பழகச் செய்யுங்கள், உங்கள் பகுதியில் பழகச் செய்யுங்கள், உங்கள் பள்ளியில், நிறுவனத்தில், ஏன் அலுவலகங்களிலும் கூட இதைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். இப்போதிலிருந்து ஒரு மாத காலம் தொடங்குங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள், ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று உங்களின் பங்களிப்பும் இருக்கும்.

அலுவலகங்களில் காலையில் அனைவரும் குழுமும் போது யோகம், பிராணாயாமம் ஆகியவற்றை அனைவரும் இணைந்து செய்கிறார்கள் என்று நான் பல முறை படித்திருக்கிறேன், இதனால் ஒட்டு மொத்த அலுவலகத்தின் திறனும் மேம்படுகிறது, ஒட்டு மொத்த அலுவலகத்தின் கண்ணோட்டம் மாற்றம் அடைகிறது, சுழல் நல்லவிதமாக மாறுகிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதியை நாம் நமது வாழ்க்கையில் யோகத்தை வரவேற்கும் விதமாக ஆக்க முடியுமா, நமது சமூக வாழ்க்கையில் யோகத்தை இடம் பெறச் செய்ய முடியுமா, நமது அக்கம் பக்கத்தில் யோகத்தை அறிமுகப்படுத்த முடியுமா? நான் இந்த முறை சண்டீகட்டில் நிகழ்ச்சியில் பங்கு எடுத்துக் கொள்ளச் செல்கிறேன், ஜூன் மாதம் 21ஆம் தேதி சண்டீகட் மக்களோடு நான் யோகாஸனம் பயில இருக்கிறேன். நீங்களும் அன்றைய தினத்தில் இணையுங்கள், ஒட்டு மொத்த உலகும் யோகம் பயில இருக்கிறது. இதிலிருந்து நீங்கள் விடுபட்டுப் போய் விட வேண்டாம் என்பதே எனது விண்ணப்பம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது தான் பாரதத்தை ஆரோக்கியமாக ஆக்க மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே, மனதின் குரல் வாயிலாக உங்களோடு நான் தொடர்ந்து இணைந்து வந்திருக்கிறேன். நான் வெகு நாட்கள் முன்பு உங்களுக்கு ஒரு செல்பேசி எண்ணை அளித்திருந்தேன். அதில் ஒரு missed call தந்தால், நீங்கள் மனதின் குரலைக் கேட்கலாம் என்று கூறியிருந்தேன், ஆனால் இப்போது அது மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மனதின் குரலை நீங்கள் செவிமடுக்க, வெறும் 4 எண்கள் மட்டுமே போதுமானது, அதில் missed call கொடுத்து மனதின் குரலை கேட்டுக் கொள்ள முடியும். அந்த 4 இலக்க எண் – ஒன்று ஒன்பது இரண்டு இரண்டு, 1922. 1922 என்ற இந்த எண்ணில் missed call அளிப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும், மனதின் குரலைக் கேட்டு மகிழலாம்.

அன்புநிறை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வணக்கங்கள். நான் தண்ணீர் பற்றிக் கூறியவற்றை மறந்து விடாதீர்கள். நினைவிருக்கும் இல்லையா? நல்லது. நன்றிகள். வணக்கம்.

தமிழாக்கம் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன், சென்னை வானொலி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories