பாவம் நேற்று தான் ஐரோப்பிய சுற்றுலாவுக்குச் சென்றார் நாயுடுகாரு! அதற்காகவே காத்திருந்ததுபோல் கூட்டணி போட்டு கட்சி மாறியுள்ளனர் தெலுகு தேசம் எம்.பி.க்கள்!
வெளிநாட்டில் விடுமுறையைக் கொண்டாடும் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் நால்வர் பிஜேபிக்கு தாவுகிறார்கள். இது குறித்து லண்டனில் இருந்து கருத்து தெரிவித்த நாயுடு “நம் கட்சிக்கு அதிர்ச்சிகள் புதிதல்ல. கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தைரியம் இழக்க வேண்டாம். சுயநல அரசியலுக்காக சில தலைவர்கள் கட்சியை விட்டு சென்றதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று கட்சித் தொண்டர்களைத் தேற்றியுள்ளார் நாயுடுகாரு.
தெலுகுதேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் சொந்தக் கட்சிக்கு ஒரு ஷாக் கொடுத்திருக்கிறார்கள்.
“குடும்பத்தை விட்டு விலகி… வேறு குமுட்டி அடுப்பு மூட்டி விட்டார்கள் ” என்று அவர்களைப் பற்றி ஊடகங்கள் கூவி மாய்கின்றன.
தனியாக ஒரு குழுவாக தங்களை ஏற்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளனர் இந்த நால்வரும்.
சுஜனா சௌத்ரி, சி எம் ரமேஷ், கரிகிபாடி ராம் மோகன் ராவ், டி ஜி வெங்கடேஷ் ஆகிய இந்த நால்வரும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். கட்சியில் தமக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அதனால் மாறுவதாகவும் கூறியவர்கள் மோடி தலைமையில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அதனால் பாஜக.,வில் சேரப் போவதாகவும் காஷாயத் துண்டு கழுத்தில் தொங்க பேட்டி அளித்திருக்கிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வென்றது. தற்போது அக்கட்சிக்கு என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆறு எம்.பிக்கள் உள்ளனர். கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு விடுமுறைக்காக குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்களும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையிலும் பெரும்பான்மையைப் பெற பாஜக., முயற்சி எடுத்து வருகிறது.
இருப்பினும், வெங்கய்ய நாயுடு முன்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமானவர். என்னதால் கட்சிக்காக உழைத்தாலும், சந்திரபாபு நாயுடுவுக்கு நண்பர் என்பதால், பாஜக.,வின் வளர்ச்சிக்கு அவர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று பாஜக.,வினர் பல நேரங்களில் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் துணை குடியரசுத் தலைவர் ஆக்கப் பட்டு, ஆந்திரத்தில் கட்சிப் பணிகளை வளர்க்க பாஜக., மேலிடம் முயற்சி எடுத்தது குறிப்பிடத் தக்கது.
தற்போது இந்த நான்கு எம்.பி.க்களின் ராஜினாமாவை வெங்கய்ய நாயுடு ஏற்பாரா? அல்லது நால்வரையும் தனிக்குழுவாக அங்கீகரிப்பாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவுக்கு உதவும் விதமாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா என்றெல்லாம் ஊடகங்களில் விவாதங்கள் களைகட்டி வருகின்றன.