லேடி சூப்பர் ஸ்டார் விஜய்சாந்தி ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரியுமா? அதற்கான காரணத்தை அவரே தெரிவிக்கிறார் இப்படி..!
இன்று (ஜூன் 24) லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியின் பிறந்தநாள். இந்த நேரத்தில் அவர் ஊடகங்களுடன் சற்று மனம் திறந்து உரையாடினார். தன்னுடைய சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என சிலவற்றுடன் கூட தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவர் ஊடக நண்பர்களுடன் கலந்துரையாடினார். அதில் அவர் ஏன் இதுவரை குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தையும் வெளியிட்டார்.
நீண்டகாலமாக ஹீரோயினாக ஹீரோக்களுக்குச் சமமாக நின்று நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்றவர் அதிரடி ஆக்ஷன் விஜயசாந்தி.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்து விரைவில் வெளிவரப் போகும் “சரி லேது நீக்கெவ்வரு” என்ற திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கப் போகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சாந்தி.
விஜயசாந்திக்கு சீனிவாச பிரசாத் என்பவருடன் திருமணம் ஆனது. ஆயினும் இது குறித்து கூறிய விஜயசாந்தி, தனக்கு திருமணமாகியும், தான் வேண்டுமென்றே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றார். மக்கள் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதற்காகவே இந்த முக்கிய முடிவினை தான் எடுத்ததாகச் சொன்னார்.
பதினேழு வயதிலேயே நான் என் தந்தையை இழந்துவிட்டேன் என்று கூறிய விஜய சாந்தி, தாம் அந்த துயரத்திலிருந்து மீளும் முன்பே அதற்கு அடுத்த ஆண்டே தாயையும் இழந்து தனித்து விடப்பட்டதாக சோகத்துடன் தெரிவித்தார்.
“அந்த நிலையில் எனக்கு துணையாக இருந்தவர் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச பிரசாத். ஆபத்தில் துணையாக நின்ற ஸ்ரீனிவாச பிரசாத்தும் நானும் 1988 மார்ச் 29 ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் குழந்தை என்றால் விருப்பம்தான். ஆயினும் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அதை நான் நினைக்கவுமில்லை” என்றார்.
திரைப்படங்களோடு கூட அரசியலில் பிஸியாக இருப்பதால் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால், தாம் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றார். மேலும், அரசியல் துறையில் இருப்பதால், இந்த மக்களே என் பிள்ளைகள்தான் என்றார் விஜயசாந்தி.
விஜயசாந்தி முதலில் பிஜேபியோடு சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் ‘தல்லி தெலங்காணா’ என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் டிஆர்எஸ் கட்சியுடன் தன் கட்சியை இணைத்தார்.
பின்னர், ‘மேதக்’ நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஆனால், அவருக்கு டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவுடன் ஒத்துப் போக வில்லை. எனவே தாம் டிஆர்எஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாகக் கூறி, பின்னர் கை சின்னத்துக்கு கைகொடுத்து காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது காங்கிரசின் முக்கிய தலைவராகவே உள்ளார் விஜயசாந்தி. இன்று அவருக்கு பிறந்த நாள்!