கேதார்நாத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், இப்போது புனித யாத்திரை மேற்கொள்வோர் குவிந்து வருகின்றனர். யாத்திரை தொடங்கிய முதல் 45 நாட்களில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கேதார் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது ஒரு சாதனை அளவு என்கிறது வரலாறு!
உத்தராகண்ட் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இமயமலைப் பகுதியில், சார்தாம் யாத்திரை எனப்படும் நான்கு புனிதத் தலங்கள் யாத்திரை மிகவும் புகழ் பெற்றுள்ளது.
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்ற நான்கு தலங்களுக்கும் புனிதப் பயணம் மேற்கொள்வோர் இந்த ஆண்டு அதிகரித்துக் காணப் படுகிறது. குறிப்பாக, கேதார்நாத் கோயில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை பொதுமக்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கடும் குளிர் காரணமாக மற்ற மாதங்களில் இக்கோயில் மூடப்பட்டிருக்கும்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட மேகவெடிப்பு எனப்படும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் கேதார் செல்வோரின் எண்ணிக்கை சரிந்து வந்தது.
ஆனால் தற்போது, மத்திய மாநில அரசுகளின் தீவிர செயல்பாட்டால், கேதார்நாத் மறுசீரமைக்கப் பட்டது. பிரதமர் மோடி அடிக்கடி செல்லும் தலமாக கேதார் மாறிப் போனது. அங்கே சுற்றுலாவை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மோடி மேற்கொண்டார்.
இதை அடுத்து இந்த வருடம் கேதார் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2013ல் 3.33 லட்சம் பயணிகளாக இருந்த எண்ணிக்கை, 2014இல் 40,922 என குறைந்து போனது. பின்னர் 2015ல் 1.54 லட்சம் பேரும், 2016ல் 3.09 லட்சம் பேரும், 2017ல் 4.71 லட்சம் பேரும், 2018ல் 7.32 லட்சம் பேரும் யாத்திரை மேற்கொண்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் 45 நாட்களிலேயே 7.35 லட்சத்திற்கும் அதிகமானோர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதில் பாதயாத்திரையாக வந்தவர்களின் எண்ணிக்கையே ஒரு நாளில் 36,000க்கும் அதிகம். அந்த வகையில், பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை முதல் முறையாக அதிக அளவைத் தொட்டிருக்கிறது. ஜூன் 7 ஆம் தேதி 36,179 பேஎ, ஜூன் 10 ஆம் தேதி 36,021 பேர் என 36 ஆயிரம் பேர் பாத யாத்திரையாக வந்துள்ளனர்.
இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரைக் காலம் முடிய இன்னும் 5 மாதங்கள் இருப்பதால், இந்த முறை பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.