கடத்திச் செல்லப்பட்ட டிஆர்எஸ் தலைவர் எம்பிடிசி ஸ்ரீனிவாசராவ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கம்மம் என்ற ஊரில் மாவோயிஸ்டுகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஸ்ரீனிவாச ராவ் கடத்தப் பட்டபோதே, மாவோயிஸ்டுகளின் வெறிச்செயல் குறித்து சந்தேகம் எழுந்தது. அதன்படியே நடந்து விட்டதாகக் கூறப் படுகிறது. இது, டிஆர்எஸ் தலைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்பிடிசியாக பணியாற்றிய சீனிவாசராவ் மாவோயிஸ்டுகளால் மிகக் கொடூரமாக கோடாலியால் வெட்டி கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘பாரம்பபாடு – புட்டபாடு’ சாலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் நடந்துள்ள இடத்தில் ரத்த வெள்ளத்தில் சீனிவாச ராவின் உடல் கிடந்துள்ளது. அவர் போலீஸாருக்கு இன்பார்மர் ஆக மாறி மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளைத் தெரிவித்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அதற்காக அவரை மாவோயிஸ்டுகள் கொன்று விட்டதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.
‘சார்ல’ பகுதியில் கமிட்டி செயலாளர் சாரதாவின் பெயரில் ஒரு கடிதத்தைக் மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர். பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சார்ல மண்டலம் ‘பெத்தமிடிசிலேரு’ எம்பிடிசி.,யை (ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது) மாவோயிஸ்டுகள் ஜூலை 8ஆம் தேதி கடத்திச் சென்றனர்.
அன்று இரவு ஆயுதங்களுடன் வந்த 15 மாவோயிஸ்டுகள் நல்லூர் சீனிவாச ராவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர் மனைவியையும் மகனையும் அடித்துத் துன்புறுத்தி, ஸ்ரீனிவாசராவை தண்டகாரண்ய காடுகளுக்குள் கடத்திச் சென்றார்கள். வீட்டில் இருந்த அவருடைய மோட்டார் பைக்கையும் எடுத்துச் சென்றார்கள்.
அண்மைக் காலமாக சற்று அமைதியுடன் இருந்து வந்த மாவோயிஸ்டுகள், தற்போது மீண்டும் வாலாட்டும் வகையில், ஆளும் கட்சித் தலைவரை கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இது, உள்ளூர் மக்களைப் பெரிதும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து, டிஆர்எஸ்., தலைவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மாநிலத்தில் அச்சவுணர்வை ஏற்படுத்தி உள்ளது!