கடந்த திங்கள் கிழமை சங்கமித்ரா விரைவு ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சௌதான், அவரின் நண்பர் பிரவீன், மேலும் சில சுரங்கத் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் வேலை தேடி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
தொழிலாளர்கள் அனைவரும் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்துள்ளனர்.அவர்களுடன் சேர்ந்து சுனிலும் கதவுக்கு அருகில் கீழே அமர்ந்தவாறு தூங்கியிருக்கிறார். அன்று நள்ளிரவு 2 மணியளவில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது கதவு வழியாக வெளியில் விழுந்துள்ளார். ரயில் செல்லும் சத்தத்தில் அவர் வெளியில் விழுந்தது அருகிலிருந்த யாருக்கும் கேட்கவில்லை.வாராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பல் ரயில் நிலையத்தைக் கடந்து சிறிது தூரத்தில் அவர் விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் தண்டவாளத்துக்கு அருகிலிருந்த இரும்புக் கம்பியில் பலமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் சுனிலின் வயிறு கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த குடல் தெரிந்துள்ளது. அந்த இருட்டில் செல்போன் கீழே விழுந்ததையும் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நீண்ட நேரம் உதவிக்காகப் போராடியுள்ளார் சுனில். ஆனால் யாரும் வரவில்லை.
இறுதியாக தன் சட்டையைக் கழற்றி வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு 10 கி.மீ தூரம் வரை தண்டவாளத்திலேயே நடந்து சென்றுள்ளார். ஹசன்பர்தி ரயில் நிலையம் வந்த பிறகு அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக அதிகாரிகளை உஷார்படுத்தி ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சுனில் வாராங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வயிறு, குடல் மட்டுமில்லாது தண்டுவடம், கை, கால் மூட்டுகளிலும் அவருக்குப் பலத்த அடிபட்டுள்ளது. பின்னர் சுனிலுக்கு நினைவு வந்து அவரின் சகோதரர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சகோதரரும் அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். சுனில் மது போதையினால் கீழே விழுந்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட நிலையில், விபத்து அன்று அவர் மது அருந்தவில்லை என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.