ஆல் இண்டியா மஜ்லிஸ் இ இட்டிஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) எம்பி அசாதுதீன் ஓவைஸியின் இளைய சகோதரர் அக்பருதீன் ஓவைஸி இப்போது ஜூலை 23ல் பேசிய வெறுப்புப் பேச்சுக்காக வழக்கை எதிர்கொண்டிருக் கிறார்.
எம்ஐஎம்., கட்சித் தலைவரும் சந்திராயன்குட்டா எம்எல்ஏ.,வுமான அக்பருதீன் ஓவைசி கரீம்நகரில் உதிர்த்த கருத்துக்கள் இப்போது மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளன.
2013 இல் ஓவைஸி ஒரு முறை செய்த விமர்சனத்தால் 40 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டி வந்தது. இப்போது மீண்டும் அக்பருதீன் ஓவைஸி பரபரப்பு கருத்துக்களைக் கூறி இருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால் கரீம் நகர் காவல்துறை ஆணையர் கமலாசன் ரெட்டி, இப்போது அக்பருதீன் அந்த வீடியோவில் அப்படி ஒன்றும் மத வெறுப்புக் கருத்துகளைக் கூறவில்லை என்று அவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“15 நிமிடங்கள் போலீஸ் ஒதுங்கியிருந்தால்….” என்று 2013இல் அக்பருதீன் பேச்சு அப்போது புயலைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் சிறை தண்டனை கூட அனுபவித்தார். ஆனால் பிணையில் வெளியே வந்தார். அப்போது ஒன்றாக இருந்த ஆந்திரப் பிரதேசத்தில், அவர் மீது வழக்கு பதியப் பட்டிருந்தது.
தெலங்கானா மாநிலம் ஏற்பட்ட பின்னர் அந்த வழக்கு காலாவதியானது. அதனால் இதுவரை அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு கூட தாக்கல் செய்யப் படவில்லை என்று பாஜக., தலைவர்கள் ஆத்திரத்துடன் கூறியுள்ளனர்.
அன்று கூறிய அதே கருத்தின் வரிசையில், அண்மையில் கரீம் நகரில் பயணித்த அக்பருதீன் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். மதவெறுப்பு பேச்சு பேசி கலவரத்தை தூண்டும் இதுபோன்றவர்களை சும்மா விடக்கூடாது என்று பிஜேபி கட்சியினர் எச்சரிக்கின்றனர்.
கரீம் நகரில் பேசுகையில் அக்பருதீன் ஒவைசி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை குற்றம் சாட்டினார். மேலும் ‘அவர்கள் இன்னும் நான் 2013இல் பேசிய 15 நிமிட பேச்சில் இருந்து மீண்டு வரவில்லை போலும்!” என்றார்.
2013இல் “போலீசார் 15 நிமிடங்கள் ஒதுங்கி இருந்தால்… நாங்கள் நூறு கோடி ஹிந்துக்களையும் ஒழித்துக் கட்டுவோம்” என்று ஓவைஸி பேசியிருந்தது குறிப்பிடத் தக்கது.
தற்போது, அக்பருதீன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யும் படி தெலங்கானா நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.