டிரம்ப் மூலம் வலை விரித்த இந்தியா; விழுந்த பாகிஸ்தான்: இம்ரானை வறுத்தெடுக்கும் நவாஸ் ஷெரீப் மகள்!

Published:

maryam nawaz imran khan - 2026

அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா வலைவிரித்தது; அதற்கு இம்ரான் கான் உடந்தையாகிவிட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப்  குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் பிரச்னையில் நேற்று அதிரடி திருப்பமாக, மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இது இந்தியாவில் இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய ஆதரவு அரசியல் கட்சிகளால் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. அது போல், பாகிஸ்தானிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த பிறகுதான் இவ்வாறு நடந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தனது கருத்தை டிவிட்டர் பதிவுகளில் சரமாரியாக வெளிப்படுத்தி, இம்ரான் கானை ஒரு வழி செய்துவிட்டார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ்.

அவரது கருத்துகளில்… இந்தியா, காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்க, என்றைக்கோ நினைத்து விட்டது! அதற்குரிய காய்களை 2014 ல் இருந்தே நகர்த்தி விட்டது! இதன் ஒரு பகுதியாக அனைத்து நாடுகளிடமும் நடப்புறவை வளர்த்தது!  வல்லரசு நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவின் நட்பில் உள்ளன!

maryam nawaz - 2026மேலும் ஈரானை கைக்குள் எடுத்தது, இதனால் மற்ற வளைகுடா நாடுகளுடன் நடப்புறவில் பாதிப்பு வராத மாதிரி நடந்து கொண்டது! இன்று பாகிஸ்தானை சுற்றி உள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கைக்குள்! இதில் இஸ்லாமிய நாடுகளும் அடக்கம்! இத்தனை வலையும் விரித்த பிறகுதான் செயலில் இறங்கியது. ஆனால் நம் நாடு யாருடனும் நட்பில் இல்லை, சீனாவை தவிர!

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

எல்லாவற்றுக்கும் மேலாக ராணுவ பலத்தை பெருக்கியது. சீனாவை பின்வாங்கச் செய்தது. இரண்டு முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. கடைசியாக புல்வாமா தாக்குதல் மூலம் பாகிஸ்தானை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது இந்தியா!

இன்றைய நிலையில் நமக்கு ஆதரவு கொடுத்தால் இந்தியாவை பகைக்க வேண்டி வருமோ என்று அனைத்து நாடுகளும் பயபடுகின்றன! இவ்வளவு செய்த பிறகு தான் செயலில் இறங்கியது இந்தியா!

காஷ்மீர் பிரச்சனையை சரி செய்வது என்பது, மோடி இரண்டு வாரத்தில் எடுத்த முடிவு அல்ல! அவர் மறுபடி ஆட்சி அமைத்தவுடனே தொடங்கி விட்டார். அனைத்து ராணுவம், தந்திரங்களை தயார்படுத்தி வைத்து விட்டார். அதன் பிறகுதான், தான் நினைத்துவைத்த செயலை செய்து முடிக்க, காஷ்மீர் விவகாரத்தை வெளிப்படுத்த ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அப்படி எதுவும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை! அந்த நிலையில்தான் ராஜ தந்திரத்தை கையில் எடுத்தார். அதற்கு கை கொடுத்தவர் டிரம்ப்!

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

காஷ்மீர் பற்றி டிரம்பிடம் மோடி பேசவே இல்லை! ஆனால் டிரம்பு பேசியதாக ஒரு நகர்வை நகர்த்தியது இந்தியா! காஷ்மீர் குறித்து இரண்டு வாரம் முன் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்னையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதைக் குறித்து பேசினார். நான் கண்டிப்பாக உதவத் தயார் என்று டிரம்ப் பேசினார். அவரின் இந்தக் கருத்தை தவறு என்று இந்தியா கூறியது.. இது வெறும் நாடகம் தான்!

மோடி காஷ்மீர் விஷயம் குறித்து கண்டிப்பாகப் பேசியிருக்க மாட்டார்! ஆனால் அவர் சொல்லாததைக் கண்டிப்பாக ட்ரம்ப் சொல்ல மாட்டார்!அதையும் கடந்து ட்ரம்ப் சொல்லுகிறார் என்றால் இது நாடகம் இல்லாமல் வேறென்ன? இது நம் ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லை!

இந்தச் சூழ்ச்சிக்குள் பாகிஸ்தான் மாட்டிக் கொண்டது. இம்ரான் அமெரிக்காவின் இந்த விருப்பத்தை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது என்றார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டால் சரியாக இருக்கும். பாகிஸ்தான் பிரச்னையை தீர்க்க அமெரிக்காவின் ஆதரவு தேவை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

இதன் பிறகுதான் மோடி அதிரடியைத் தொடங்கினார்! காஷ்மீரை இணைத்தும் விட்டார்! நமக்கு ஆதரவுக் குரல் கொடுக்க யாரும் இல்லை; அனைவரும் ஒதுங்கி விட்டனர்!

பாகிஸ்தான் டிரம்பிடம் காஷ்மீர் விஷயத்தில் உதவி கேட்டு இருக்கக் கூடாது. அப்படிக் கேட்டதன் மூலம் அவர் இந்தியாவின் வலையில் சிக்கி விட்டது. இந்தியா திட்டமிட்டுதான் இப்படி செய்திருக்கிறது. இந்தியா திட்டமிட்டது கூட இம்ரானுக்கு தெரியவில்லை. பாகிஸ்தானை இந்தியா, டிரம்ப் மூலம் மறைமுகமாக வீழ்த்தியுள்ளது.

ஆனால் இம்ரான் கான் பாகிஸ்தானில் தனது அரசியல் எதிரிகளை காலி செய்ய உழைத்துக் கொண்டு இருக்கிறார். இம்ரான் கான் தோல்வி அடைந்துவிட்டார். காஷ்மீரில் நடந்த இந்தப் பிரச்னைக்கும் எதிராக நாளை சர்கோதாவில் நான் பேரணி செல்ல இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் மர்யம் நவாஸ் ஷெரிப்!

அவரின் இந்தப் பேச்சு பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக குரல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img