கடுப்பாகும் காஞ்சிபுரம் பயணிகள்: ஏசி பஸ்ஸில் ஏற கட்டாயப் படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள்!

Published:

kanchi tambaram bus - 2026

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, தாம்பரம் செல்வதற்கு ஏசி பஸ்ஸில் ஏறுவதற்காக போக்குவரத்து அதிகாரிகள், பயணிகளை கட்டாயப் படுத்துகின்றனர் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, தாம்பரத்துக்கு அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் தங்களுக்கு அலுவலகம் செல்வதற்கான நேரத்தைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட பஸ்களில் ஏறி சென்று வந்தனர்.

குறிப்பாக, சென்னை செல்வதற்கு ஸ்ரீபெரும்புதூர் வழியில் கோயம்பேடு செல்லும் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன. அதே நேரம், வாலாஜாபாத், படப்பை வழியாக தாம்பரத்துக்கு குறைந்த தூரம், குறைந்த நேரம் என்பதால், தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட ஐ.டி., அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்பவர்களும், தாம்பரம் வந்து, புறநகர் மின்சார ரயில்களில் கோட்டை வரை செல்லு பயணிகளும் இந்தப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக இந்த வழியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவு என்பதும் ஒரு காரணம்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கும், அடையாறுக்கும் சாதாரண பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் காலை நேரத்தில் அதிக அளவில் பயணிகள் சென்றுவந்தனர்.

bus kanchipuram tambaram - 2026
இது தினசரி நடைபெறும் நிகழ்வு 79 A c பேருந்தின் முன்பு பயணிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு பதில் கூற முடியாமல் திணறும் நிர்வாக ஊழியர் (படம்: சாரங்கபாணி சுந்தர்)

இந்த நிலையில், தாம்பரத்துக்கு வேலூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வழித்தடம் 155 மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு வழித்தடம் எண் 79 ஆகிய இரு பேருந்துகள் தற்போது ஏசி பஸ்களாக இயக்கப் படுகின்றன.

காஞ்சிபுரத்தில் இருந்து புதிதாக இயக்கப் பட்டு வரும் ஏஸி பஸ்களில் கூடுதல் கலெக்சன் பார்ப்பதற்காக, காலை அலுவலகம் செல்லும் நேரத்தில், ஏசி பஸ்களை மட்டுமே ஸ்டாண்டில் நிறுத்தி, அதனை நிரப்புவதற்கு அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். இந்த நேரத்தில் வழக்கமாகச் செல்ல வேண்டிய சாதாரண பஸ்களை எடுக்க அனுமதிப்பதில்லை. ஏசி பஸ்களை கிளப்பும் வரையில் மற்ற எந்த பஸ்களையும் எடுக்க விடுவதில்லை.

வேலூர் தாம்பரம் இடையிலான சாதாரண பஸ்ஸில் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு ரூ. 56ம் தடம் எண் 79 சாதாரண பஸ்ஸில் ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. ஆனால் ஏஸி பஸ்களில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. மேலும், ஏஸி பஸ்களை சிறப்பு பயண வழித்தடமாக இடைநில்லாப் பேருந்து போல் 1டூ1 என்றும் இயக்குவதில்லை. அனைத்து இடங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிவிட்டுச் செல்கின்றனர். இதனால் பயணிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஏஸி பஸ்களும் சாதாரண பஸ்களில் உள்ளதைப் போல் 3*2 சீட் வண்டியாகத்தான் இயக்கப் படுகிறது. இப்படி இருக்கும் போது, அதிகாரிகள் ஏன் இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர் பயணிகள்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

முன்னதாக நவ.16ம் தேதி தாம்பரத்தில் இருந்து வேலுார், சென்னையில் இருந்து புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு, நான்கு ‘ஏசி’ பஸ் போக்குவரத்தை, காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்திருந்தார்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கடந்த ஆண்டு வரை சென்னை மாநகர ‘ஏசி’ பஸ் இயங்கி வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நான்கு புதிய ‘ஏசி’ பஸ் போக்குவரத்து காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை அடுத்து, தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலுார் வரை இரு பஸ்களும், சென்னை கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரிக்கு இரு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

  • ஆசார்யா

Related articles

Recent articles

spot_img