பெரியார் பெரியாரா ? இந்தத் தலைப்பில் திரு. ஆரோக்கிய சாமி எழுதிய நூலை தோழி புதுக்கோட்டை பாரதி எனக்குப் பரிசளித்தார். ஏற்கெனவே அந்த ஆசிரியர் எழுதிய, நான் ஏன் கம்யூனிஸ்ட் இல்லை என்ற நூல் எனக்குப் பிடித்திருந்ததால் அந்த நூலையும் வாசித்தேன். அனுபவம் சார்ந்த எழுத்து அது.
ஆறடி மனிதனுக்கு, அறுபதடியில் கட்டவுட் வைத்து,அதை அண்ணாந்து பார்த்து பழகிய கூட்டம், வரலாற்று வீதியில் பெரியாருக்கும் கட்டமைத்த புனைவுகளை கட்டவுட்டாக வைத்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் சீரிய சிந்தனையாளர்கள் எனக் கொண்டாடப்பட்டவர்கள் நால்வர்.
டார்வின், காரல் மாக்ஸ், ஐன்ஸடீன், சிக்மண்ட் பிராய்டு.இந்த நால்வர் சிந்தனை உலகெங்கும் அலைகளாகப் பரவியவை.
அவர்களையும் முழுமையாக கற்காமல் அவர்களின் சிந்தனைகளை அரைகுறையாய் விழுங்கி, பொது வெளியில் வாந்தி எடுத்தவன் எல்லாம் அறிவாளிப்பட்டம் தாங்கிய காலம் உண்டு.ஆனால் அந்த மூலவர் நால்வர் கருத்திலும் பெரும் பகுதி காலாவதியாகிவிட்டது இப்போது.
அவர்களுக்கே அந்தக்கதி. ஆனால் இன்னும் பெரியாரை புரட்சிகர சிந்தனையாளர் என்று நம்புகிறவர்களை என்ன சொல்ல? அவர் புதிய சிந்தனையாளர்கூட இல்லை. ஆரிய சமாஜம் அவருக்கு முன்பே,சாதி மறுப்பு, பெண்விடுதலை, தீண்டாமை போன்றவற்றை பேசிவிட்டது. அது பாரதியார் பாடலிலும் உரக்க எதிரொலி எழுப்பிவிட்டது .
அப்புறம் பெரியார் சொன்ன சாமாச்சாரம் என்ன ? கடவுள் மறுப்பா ? கடவுள் கொள்கைமீதும் அவர் கைக்குக் கிடைத்த கல்லை வீசியவரே தவிர ,கடவுளைக் கொல்ல பேனாக்கத்தி
அளவுக்கும் ஒரு ஆயுதம் இல்லாத ஆசாமி அவர்.
அவரது சிந்தனைகள் கொள்கையாய் கோட்பாடாய், சிந்தாந்தமாய் திரண்டு வெளிப்படாமல், வெறும் கருத்துக்களாய் சிந்தனையின் கருச்சிதைவாய் வெளிப் பட்டவை. அவரைக் கொண்டாடுவது கட்டவுட்டை அண்ணாந்து பார்க்கும் செயல்தான்.
எங்கள் குடும்பத்திலும் தி.மு.க.வுக்கு ஆதரவாளராக என் சித்தப்பா எம்.ஆர் .சேகர் இருந்தார். அவர் பெரியாரை நம்ம தாத்தாடா என்று சொல்லி வளர்த்த காரணத்தால் பிஞ்சு வயதிலேயே பெரியார்மீது பிரியம் வளர்ந்தது. அதன் விளைவாக பள்ளிப் பருவத்திலேயே பெரியார் சிந்தனைக் களஞ்சியத்தை முழுதும் படித்திருந்தேன். தி. க. மேடையில் ஏறிப் பல முறை பேசியிருக்கிறேன். செல்வராஜ் என்ற என் பெயரில் ராஜ் என்பதில் சமஸ்கிருத வாசனை இருப்பதால் இளங்கவி செல்வரசு என்று என் பெயரை மாற்றி என்னை மேடையேற்றியவர். தி. க. சொக்கர்தான்.
ஆனாலும் தி.க.விலிருந்து ஒதுங்கி விலகிவிட்டேன் .அதற்கு காரணம் நிறையப் படிக்கும் கெட்ட பழக்கம் எனக்கிருந்தது. அது பெரியாரின் சிந்தனை வறுமையை வெளிப் படுத்தியது. பெரியாரை அவரது பீடத்திலிருந்து தள்ளிவிட்டு காரல்மார்க்ஸ் வந்து உட்கார்ந்தார். அவரும் கொஞ்ச காலம் மட்டுமே அந்த நாற்காலியில் இருந்தார். இப்போது வள்ளுவரும் திருமூலரும் உட்காந்திருக்கிறார்கள்.
தி.க.வை விட்டு நான் வெளியேற,பெரியாரைவிட ,அவரது தொண்டர்களாக இருப்பவர்கள் முக்கியக் காரணமாக இருந்தார்கள். கட்சிக் கூட்டம் நடத்த திரட்டிய காசில் கள்ளக் கணக்குக் காட்டி சாராயம் குடிக்கும் சிக்னல் மணி, ஜெய ரூபாசிங் என்ற நண்பர்கள் ,மது ஒழிப்புக்காக தன் தென்னந் தோப்பையே வெட்டியவர் பெரியார என்று பெருமை பேசுவார்கள். எனக்கு கோபம் பற்றிக் கொண்டுவரும்.
தி் க தலைவர் சொக்கர் நல்ல மனிதர்.பாகவதர் கிராப் வைத்திருப்பார். ஓமக் குச்சி உடம்பு. அவர் சாதியை எதிர்த்து மேடையில் பேசுவார் .ஆனால் நடைமுறையில் உள்ளூர பழமை படிந்த ஆள்தான் . ஒருமுறை நிதி வசூலுக்குப் போகும்போது, கோபால் செட்டியார் ஒரு ரூபாய் கொடுத்தார். நீ என்ன எனக்குப் பிச்சை போடுகிறாயா ? என்றார் சொக்கர். பிச்சைக்காரனுக்கு கொடுத்தாலாவது புண்ணியம் கிடைக்கும். கடவுள் இல்லை என்று சொல்லும் உனக்குக் கொடுப்பது பாவம்
என்றார் செட்டியார் .
வாக்கு வாதம் முற்றியது. செல்வம் இந்தச் செட்டிப் …..மகனுக்கு என்ன துணிச்சல் பாத்தியா ? இவனுக்கு ஒரு பாடம் புகட்டனும் டா என்றார் சொக்கர் . கோபத்தில் சாதி சார்ந்த வசவுகள் பொங்கிவரும் அவரிடம். வேளாளன் போன வழி வெட்ட வெளி- மறப் பய உறவும் பனைமரத்து நிழலும்
பறக்குசும்பு- குறப்பாசாங்கு , ஆதாயமில்லாம செட்டி ஆத்தைக் கட்டி அழுவானா ? பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி சொல்லும் அரைப்பொய்க்கு ஆகுமா ?
இப்படிப் பட்ட பழமொழிகள் அவர் மனக்குகையிலிருந்து அவ்வப்போது தலைகாட்டும் .நிதான நேரத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா . திருப்பூர் கருவம்பாளையத்தில் மிகுந்த துயர வாழ்வில் அவர் இருக்கும் போது போய் பார்த்தேன்.இது ஊராடா ? எனக்குப்பிடிக்கவே இல்லை. நம்ம மண்ணுலதான்டா சாகணும்.மகனே அய்யா செத்தாலும் என்மேல கருப்புக் கொடிதான்டா இருக்கணும் என்று கண் கலங்கினார்.
கடைசியில் கருப்புக் கொடிபோர்த்தித்தான் பாடைப் பயணம்
நடந்ததாம். கேள்விப்பட்டேன். சொந்த மண்ணில் சாகும் ஆசைக்கு பகுத்தறிவில் ஏதேனும் இடம் உண்டா ? தற்போது, தம்பி கிருஷ்ண முத்துராமலிங்கத்தைப் பார்க்க அவர் குடியிருந்த வீட்டு வழியாக போகும்போது மனதை துக்கம் கவ்வியது. வெறும் கற்பிதங்களின் ஆணிகளில் ஊசலாடியே ஓய்ந்து போன மனிதன் அவர்.
நிகழ் வாழ்வின் கோணல்களையும் பிரச்சினைகளையும் காண பெரியாரிசம் உதவாது. இதைப் புரிந்து கொள்ளும்போது சருகுபோல் உதிர்ந்து போகும் அவர் பிம்பம். எதிர்மறை நோக்கும் போக்கும் அவை உள்ளவர்களையே துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
- கவிஞர் நந்தலாலா