சுட்டெரித்த சூரியணை சாந்தப்படுத்த மதுரைக்கு வந்த வருணன் மழையாய்க் கொட்டித் தீர்த்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான்.
மதுரையில் மழைக்கு ஆயூத்தமாகி இன்று முற்பகல் முதலே கருமேகங்கள் சூழ்ந்து காட்சி தந்தன. மதுரை நகரில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்ததால், குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களிலும் அண்மையில் மழை பெய்தாலும், மதுரை மாவட்டத்தில் மட்டும் கடும் வெப்பம் நிலவியது. இதைத் தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய மழையானது மதுரை நகரில் பெய்தது.
முன்னதாக, தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை