- 47 கோயில்களில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு என்று சட்ட விரோதமாகப் பணம் எடுக்க ஆணையர் சுற்றறிக்கை அனுப்புகிறார்.
- கோயில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் அளிக்கத் துப்பில்லை.
- இந்த சீர்கெட்ட துறையின் கீழ் நம் கோயில்கள் இருப்பதையும், நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளா இருப்பதுவும் அவமானம்!
- – ஆன்மீக அன்பர்களின் உள்ளக்குமுறல்
20,000 கோயில் பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை; குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் அவலம்!
கோயில் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்! இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் கண்காணிப்பாளர் மேலாளர் தலைமை எழுத்தர் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர / தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த கோயில் நிர்வாகிகள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக செயல் அலுவலர் தக்கார் ஒப்புதல் அளித்து அதன் பிறகு மண்டல இணை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு அந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப் படுவது வழக்கம்.
ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து செயல் அலுவலர்கள் எவரும் கோவிலுக்கு வரவில்லை. இதனால் கோயில் பணியாளர்களுக்கான ஊதியம் தொடர்பாக பட்டியல் தயார் செய்யப்பட்டு மண்டல இணை ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்படவில்லை. மேலும் மண்டல இணை ஆணையர்கள் தங்களது அலுவலகத்துக்கு வராத நிலையில் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஊழியர்களின் கடந்த மார்ச் மாத ஊதியம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊழியர்கள் எவரும் வராததால் இந்த மாதம் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தை நடத்த சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலையில் அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணையர் பணீந்திர ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கோயில் பணியாளர்கள் சிலர் கூறும்போது… கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் தர செயல் அலுவலர்கள் சார்பில் அந்தந்த மண்டல இணை ஆணையர் களிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்கிற நடைமுறையை தற்போது தளர்த்த வேண்டும். அதன்பிறகு பின் ஏற்பாட்டின் பேரில் மண்டல இணை ஆணையரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அறநிலையத்துறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக ஆணையர் பணீந்திர ரெட்டி அந்தந்த செயல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. என்று கூறினர்.