கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவியில் உள்ள
தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ளது கும்பாவுருட்டி அருவி. குற்றாலம்
சீசன் காலங்களில் இந்த அருவியில் குளிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான
சுற்றுலா பயணிகள் கும்பாவுருட்டிக்கு வருவார்கள்.
இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த 16 பேர் ஒரு வாகனத்தில் குற்றாலம்
வந்தனர். அவர்கள் கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவிக்கு
குளிக்கச் சென்றனர்.
கும்பாவுருட்டி அருவியில் அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு பேர் எதிர்பாராத விதமாக பாறையில்
வழுக்கி அருவியின் உள்ள தடாகத்தில் விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும்
தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இறந்தவர்கள் தூத்துக்குடி காமராஜர்புரம் அழகுமுத்துநகரைச் சேர்ந்த பழனி மகன்
ராமச்சந்திரன் (வயது 31), தூத்துக்குடி முல்லைக்காடு கீழத் தெருவைச் சேர்ந்த
சக்திவேல் மகன் இசக்கிமுத்து (25) என தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் விரைந்து சென்று தடாகத்தில்
மூழ்கி இறந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு புனலூர் அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
இச்சம்பவத்தை அடுத்து கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு
தடை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள வனத்துறைக்கு சொந்தமான இந்த அருவிப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
வைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




