
சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என கொரோனா நெருக்கடி நிலையிலும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்களை வீடுகளுக்குள் முடக்கி உள்ளது அரசு. வைரஸ் பரவல் வேகம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப் பட்டாலும்கூட, ஊரடங்கு அமல் படுத்தப் பட்ட புதிதில், தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமல் படுத்தப் பட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலைகள் முடங்கின. வர்த்தகம் பாதிக்கப் பட்டது. பள்ளி, கல்லூரிகள் முழுதும் முடங்கின. இதனால் அனைத்து தரப்பினரையும் வருமான ரீதியாக பாதிக்க வைத்தது இந்தக் கொரோனா கால முடக்கம்.
இதனைக் கருத்தில் கொண்டு சொத்து வரி கட்ட அரசு அவகாசம் அளித்தது. அதாவது 2020-21 ஆண்டிற்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதமே கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் எழுந்த பாதிப்புகள் காரணமாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இவ்வாறு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு நெருக்கடி கொடுத்துள்ளது.
பொது முடக்கம் விரைவில் முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பில், இந்தக் கால அவகாசம் ஏற்புடையதாக இருந்தது. ஆனால், இப்போதும் நீட்டிக்கப் பட்டுள்ள இந்த பொது முடக்கத்தால், வருமானம் இன்றி பொதுமக்கள் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் மேலும் கால அவகாசம் கொடுக்கப் பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழியர்களின் சம்பளம் என மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், வரி வசூல் செய்தால் மட்டுமே மாநகராட்சியால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.



