சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி குஷ்புவுக்கு கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது மகளிர் காங்கிரஸ் தலைவராக உள்ள சாய்லெட்சுமியின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய நபரை அப்பதவியில் நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இதுவரை கட்சிப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க குஷ்பு மட்டுமின்றி, விஜயதாரணி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ யசோதா, ஹசீனா சையத், ராணி வெங்கடேசன், காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியில் கூட்டம் சேர்க்கும் நட்சத்திரப் பேச்சாளராக குஷ்பு உள்ளதால், அவருக்கே மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப் படக் கூடும் என்று தெரிகிறது. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.
குஷ்புவுக்கு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி: மேலிடம் முடிவு?
Popular Categories


