பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ். பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக இருக்கிறது என்று அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் சீராக இருப்பதாகவும், சிகிச்சை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் வெளியிடப் பட்ட மருத்துவ அறிக்கையில் எஸ்பிபி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், உயிர் காக்கும் கருவிகள் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எஸ்பிபி உடல்நிலையைக் கண்காணிக்க மருத்துவர் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், எஸ்பிபி.,க்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என்றும் பின்னர் வெளியிடப் பட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆக.22 இன்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எக்மோ மூலம் அதிகம் பேர் சிகிச்சை பெறுவதால், அந்த மருத்துவக் குழுவினரின் ஆலோசனையைப் பெற்று, எஸ்.பி.பி.,க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம்., மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.