பாஜக கூட்டத்துக்கு சென்று திரும்பிய பாஜக விவசாயி அணி நிர்வாகியை முற்றுகையிட்டு குறையை தெரிவித்த விவசாயத் தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயனார்குளத்தில் நடந்த பாஜக கூட்டத்துக்கு சென்று மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த மாநில பாஜக விவசாய அணியின் துணைத்தலைவர் முத்துராமன், விவசாய அணி மாவட்டச் செயலாளர் உசிலை கலைச்செல்வன் ஆகியோர் வந்த காரை, செல்லம்பட்டி அருகே குறவகுடி கிராமத்தில் 100 வேலை நாள் திட்டத்தில் பணிபுரிந்த விவசாயத் தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
அதன்பின், பாஜக விவசாய அணியின் மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட விவசாய அணியின் செயலர் கலைச்செல்வன் ஆகியோரிடம், கடந்த ஒரு வருடமாக 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்த சம்பளத்தை ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லையென, முறையிட்டனர்.
இதை அடுத்து பாஜக விவசாய அணி நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, விரைவில் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் முத்துராமன், மத்திய அரசானது, இலவச வீடுகள் கட்டும் திட்டம், இலவச எரிவாயு திட்டம், முத்ரா திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், அதை விவசாயத் தொழிலாளர்கள் பயன்படுத்த கேட்டுக் கொண்டார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை