அதிமுக – பாஜக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட பாஜக தலைவர் எல்.முருகன், சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த எல்.முருகன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது என்று குறிப்பிட்டதுடன், குற்றப்பின்னணி உடையவர்கள் பாஜகவில் இணைவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அனைவரும் மிஸ்டு கால் மூலமே கட்சியில் இணைவதால் பின்புலம் குறித்து ஆராய முடிவதில்லை என்றும், கட்சியில் சேர்ந்த பின்னர் குற்றச்சாட்டு எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்
செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது தெரிவித்ததாவது…
வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் பாஜக., கண்டிப்பாக இடம்பெறும். தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக., உருவெடுக்கும். இரட்டை இலக்கத்தில் பாஜக., உறுப்பினர்கள் தேர்தலில் வெல்வார்கள், பாஜக., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது.
தமிழகத்தில் பாஜக., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தற்போது அதிமுக – பாஜ., கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் தற்போது என்ன நிலை உள்ளதோ அது தேர்தலின் போதும் தொடரும். எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை என்றார்.