காவல் நிலையத்தில் லாக் அப்பில் அடைத்துள்ளவர்களை அடித்து சித்ரவதை செய்வது, மற்றும் இதன் காரணமாக ஏற்படும் மரணம் தொடர்பாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் காவல் நிலைய லாக் அப் மரணங்கள் நடப்பதாக பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் சராசரியாக 98 பேர் காவல் நிலைய லாக் அப்பில் மரணம் அடைகின்றனர். காவல் நிலைய லாக் அப்பில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான சித்ரவதை மற்றும் மரண ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் அண்மையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான சித்ரவதை மற்றும் மரணம் குறித்து விசாரித்துஅறிக்கை அளிக்க நீதிபதி பிஎஸ் சவுகான் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்துள்ள பரிந்துரையை சட்ட அமைச்சகத்தில் சட்ட கமிஷன் தாக்கல் செய்திருந்தது. அதில் காவல் நிலையங்களில் லாக் அப் சித்ரவதை மற்றும் மரணம் தொடர்பான ஆதாரங்கள் சிக்கி அதன் பேரில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து லாக் அப் மரணங்கள் மற்றும் சித்ரவதைகளை தடுப்பது தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதாவை விரைவில் சட்ட அமைச்சகம் தாக்கல் செய்ய உள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை காவல் நிலைய லாக் அப்பில் 15 ஆயிரத்து 300 பேர் இறந்துள்ளனர். இதில் 50 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் லாக் அப் மரணங்கள் என வழக்கு பதிவாகியுள்ளது. லாக் அப் சித்ரவதை மற்றும் மரணங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் லாக் அப் மரணங்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு 15 பேர் இறந்துள்ளனர். 2012ம் ஆண்டு 7 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு 7 பேர் மட்டுமே லாக்அப்பில் மரணம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


