திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, ஐப்பசி மாத பௌர்ணமி பூஜைகளுக்காக கடந்த 4 நாட்களாக, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று பௌர்ணமி தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மலைக்கு சென்றுவிட்டு பக்தர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சங்கிலிப்பாறை பகுதி அருகே, கோணதல வாசல் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் மலையின் அடிவாரப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இறந்த இளைஞர் யார், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. சாப்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.