கோயமுத்தூர்: வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். வாளையாறு சோதனைச் சாவடி பிரச்சினையில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு-கேரளா லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, கோவை லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவை சார்பில் கோவையை அடுத்த வாளையாறு சோதனைச் சாவடி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேரளாவில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் சோதனை என்ற பெயரில் குறைந்தது 20 மணி நேரம் வரை லாரிகளை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதைக் கண்டித்து கடந்த 22-7-2013 அன்று கேரளாவுக்கு லாரிகளை இயக்காமல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினோம். அப்போது அந்த மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி எங்களை அழைத்து பாலக்காட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாங்கள் வாளையாறு சோதனை சாவடியில் வெளிப்படையாக சரக்குகளை கண்டறிய ஸ்கேன் மற்றும் கேமராக்கள் பொருத்த வேண்டும், இரும்பு, ஸ்டீல் மற்றும் காய்கறி போன்ற சரக்குகளை எளிதாக சோதனை செய்ய சிறப்பு வசதி செய்ய வேண்டும், பல கிலோ மீட்டர் தூரம் லாரிகளை ஓட்டி வரும் லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உம்மன் சாண்டி உறுதியளித்தார். நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்குவதில்லை என்று முடிவு செய்து உள்ளோம்.. என்று கூறினார்.
ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்படாது!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

